ஆந்திரா புதிய தலைநகரம் அருகே சந்திரபாபு நாயுடுவுக்கு கோவில், சிலைகள்... வெடிக்கும் சர்ச்சை
ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரை தங்களது பகுதியில் அமைக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோயில் மற்றும் சிலைகள் அமைக்கப் போவதாக தெலுங்கு தேசம் தொண்டர்கள் அறிவித்துள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஆந்திராவுக்கான நிரந்தர தலைநகரம் குண்டூர்- விஜயவாடா இடையே 29 கிராமங்களை உள்ளடக்கி அமராவதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தலைநகரை உருவாக்கும் திட்டத்தை சிங்கப்பூர் வல்லுநர்கள் தயாரித்துள்ளனர்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 22-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதனிடையே தங்களது பகுதியில் உலகத் தரம் வாய்ந்த தலைநகரத்தை உருவாக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தூளூரு பகுதியில் அவரது உருவச் சிலைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் உத்தண்ட ராயனிபாளையம் என்ற கிராமத்தில் நாயுடுவுக்கு கோயில் கட்டப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உயிருடன் ஒருவர் இருக்கும் போது சிலைகள் அமைக்கக் கூடாது என கண்டிப்புடன் அவர் கூறியுள்ளார்.
ஆனால் மறைந்த நீலம் சஞ்சீவ ரெட்டிக்கு அவர் உயிருடன் இருக்கும் போதே சிலை அமைக்கப்பட்டது; கன்சிராம், மாயாவதிக்கும் அப்படி சிலைகள் அமைக்கப்பட்டன என்கின்றனர் நாயுடு ஆதரவாளர்கள்.
இதனிடையே கோதபேடா சிற்பி ராஜ்குமார் உடையாரிடம்தான் 30 சந்திரபாபு நாயுடு சிலைகள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் உயிருடன் இருப்பவருக்கு சிலை அமைப்பது மரபு அல்ல என்று கூறி அவர் இதை உருவாக்கவும் மறுத்து வருகிறார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில், சிலைகள் அமைக்கும் இந்த விவகாரம் அம்மாநிலத்தில் சர்ச்சையாகி வெடித்து வருகிறது.