காங்கிரஸில் முறைப்படி இணைந்தார் 'ஆதார் அட்டை' நந்தன் நிலகேனி!
பெங்களூர்: ஆதார் அடையாள அட்டை ஆணையத்தின் தலைவரும், ஐடி துறையின் முக்கியஸ்தரும், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான நந்தன் நிலகேனி இன்று முறைப்படி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இவர் பாஜகவின் கோட்டையாக கருதப்படும் பெங்களூர் தெற்கு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா முன்னிலையில் இன்று காங்கிரஸில் இணைந்தார் நிலகேனி.
பின்னர் செய்தியாளர்களிடம் நிலகேனி பேசுகையில், நான் சில முக்கியமான, வித்தியாசமா அனுபவங்களுடன் மக்களைச் சந்திக்க வருகிறேன்.
சாதாரண நிலையிலிருந்து இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்ற நிலைக்கு உயர்ந்தவன் நான். எனவே, எப்படி வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, எப்படி வேலை கொடுப்பது என்பது எனக்குத் தெரியும். பல லட்சம் பேருக்கு வே்லை கொடுத்தவன் நான்.

நாட்டின் 60 கோடி மக்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையின் ஐடியாவை உருவாக்கியவன் நான். ஒரு நகரம் எப்படி இயங்குகிறது, மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து நிறையத் தெரிந்து வைத்துள்ளேன். இதில் எனக்கு நிறைய அனுபவம் உள்ளது.
நான் சுத்தமானவன், உள்ளூர்க்காரன். நேர்மையானவன். எனவே மக்கள் தாராளமாக எனக்கு வாக்களிக்கலாம் என்றார் அவர்.
பெங்களூர் தெற்கு தொகுதியில் பாஜகவின் அனந்தகுமாரை எதிர்த்து நிலகேனி மோதவுள்ளார். இத்தொகுதியில் அனந்தகுமார் 5 முறை வென்றவர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications