பிடிக்க வசதியாக 'குடுமி' சைஸுக்கு கேபினட்.. மோடி திட்டம்!
டெல்லி: ஏகப்பட்ட அமைச்சர்களை வைத்துக் கொண்டு பிடி தளர்ந்து போவதிலிருந்து தப்பிக்கும் வகையில் தேவையான அளவுக்கு மட்டுமே, அதாவது சுருக்கமான, சின்ன சைஸ் அமைச்சரவையை அமைக்க நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளாராம்.
மோடி என்றாலே இரும்புக்கரம் கொண்டு நிர்வாகம் செய்பவர், ஆட்களை அதிகம் வைக்காமல், வேலையில் மட்டுமே கச்சிதமாக இருப்பதை உறுதி செய்பவர் என்பதால் குஜராத் ஸ்டைலில் மத்தியிலும் அவர் சின்ன அளவிலான அமைச்சரவையையே அமைப்பார் என்ற கருத்து நிலவுகிறது.
எனவே மத்தியிலும் தேவையான அளவுக்கு மட்டுமே அமைச்சர்களை வைத்துக் கொள்ள அவர் திட்டமிட்டு தகுதியான, திறமையானவர்களை மட்டுமே தற்போது தேர்வு செய்து வருகிறாராம்.

சின்ன அரசு.. நல்ல நிர்வாகம்
இதுகுறித்து குஜராத் அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான செளரப் படேல் கூறுகையில், எப்போதுமே சிறிய அரசு, அதிகபட்ச ஆளுமை என்பதில் நம்பிக்கை கொண்டவர் மோடி. குஜராத்திலும் அப்படித்தான் அவர் செயல்பட்டு வருகிறார். எனவே மத்தியிலும் அவரது அமைச்சரவை பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.

அவருடன் வேலை பார்ப்பதே ஜாலியானது
மோடியுடன் இணைந்து பணியாற்றுவதே ஒரு இனிமையா அனுபவமாக இருக்கும். தட்டிக் கொடுத்து அருமை வேலை வாங்குவார். பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதில் அவருக்கு ஒருபோதும் உடன்பாடு இருந்ததில்லை. அவரே பொறுப்பேற்பார்.

தெளிவான சிஸ்டம்.. வெளிப்படையான கொள்கை
ஒரு தெளிவான நிர்வாகத்தை அமைத்து, தெளிவான திட்டமிடல், வெளிப்படையான கொள்கைகள், எல்லாமே சிறப்பாக நடப்பதை உறுதி செய்வது என்று திட்டமிட்டு செயல்படக் கூடியவர் மோடி. அவருடைய நிர்வாகத்தில் எல்லாமே ஒளிவுமறைவில்லாமல் இருக்கும். அதுதான் அவரது விசேஷமே.

உடன் பணியாற்றுபவரை நம்புவார்
தன்னுடன் பணியாற்றுபவர்களை அவர் முதலில் நம்புவார். மேலும் தன்னுடன் திறமையாளர்களை வைத்துக் கொள்வதிலும் தயங்க மாட்டார். யாருக்கும் சிறப்பு சலுகை தர மாட்டார். வேலை என்றால் வேலைதான். அதில் சமரசத்திற்கே அவருக்கு இடமில்லை.

எல்லோரையும் கண்காணிப்பார்
வேலையைக் கொடுத்து விட்டு அவர் சும்மா இருக்க மாட்டார். அந்த வேலை சரியாக நடக்கிறதா என்பதையும் கண்காணித்து வருவார். அதேசமயம், அவர்களுக்குப் பின்னாலேயே திரிய மாட்டார். வேலை நடக்கவில்லை என்றால் மட்டுமே தலையிடுவார். அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தியும், ஆலோசனைகளை நடத்தியும் வேலைகளை முடுக்கி விடுவார் என்றார் அவர்.

ஒன்மேன் ஷோ டெல்லியில் எடுபடாது
ஆனால் மோடியின் ஒன்மேன் ஷோ மாநில அளவில் வேண்டுமானால் சாத்தியமாகுமே தவிர டெல்லிக்கு அது ஒத்துவராது என்று மூத்த அரசியல் ஆய்வாளரும், குஜராத் பல்கலைக்கழக முன்னாள் பேராசியரும், மோடியின் முன்னாள் ஆசிரியருமான திணேஷ் சுக்லா கூறியுள்ளார்.

டெல்லி கதை வேறு
இதுகுறித்து சுக்லா கூறுகையில், குஜராத் நிலைமை வேறு. அங்கு மோடிதான் எல்லாமே. ஆனால் டெல்லி நிலை வேறு. அங்கு அவர் தனி ஆளாக செயல்படுவது என்பது கடினமானது. மாற்றத்தை அவர் ஏற்றாக வேண்டும். அவரும் மாறியாக வேண்டும். மோடி மிகவும் கடினமான நபர் அல்ல என்பதால் நிச்சயம் இந்த மாற்றத்தை அவர் எளிதாக பழக்கிக் கொள்ள முடியும் என்கிறார் சுக்லா.












Click it and Unblock the Notifications