ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ராஜ்நாத்சிங் மீண்டும் ஆலோசனை!
டெல்லி: ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத்தை பாரதிய ஜனதாவின் தலைவர் ராஜ்நாத்சிங் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
லோக்சபா தேர்தலில் கடைசி கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. நாளை வாக்குப் பதிவு நடைபெறும் 41 தொகுதிகளில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும்.
இங்கு நேற்று மாலை தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. அதன் பின்னர் டெல்லி சென்ற மோடி முதலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நேரில் சந்தித்துப் பேசினார். இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட மோடி, தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய போது வாஜ்பாயின் ஆசீர்வாதத்தை பெற்றேன். இப்போது தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையிலும் அவரிடம் ஆசீர்வாதம் பெற்றேன். அவரை சந்திக்கும் தருணங்கள் சிறப்பானது என்று கூறியுள்ளார்.
அதன் பின்னர் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார் மோடி. இதனைத் தொடர்ந்து ராஜ்நாத்சிங், மோடி இருவரும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு சென்று அதன் தலைவர் மோகன் பகதவ் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இன்றும் ஆலோசனை
இதன் பின்னர் இன்றும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு சென்ற ராஜ்நாத்சிங் அங்கு அந்த இயக்கத்தின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த 24 மணி நேரத்தில் 2வது முறையாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த ஆலோசனைகளின் போது தேர்தலுக்குப் பின்னர் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.