டெல்லியில் அருணாச்சல் மாணவர் நிடோ மரணம் தேசிய அவமானம்: மோடி
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று காலை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூருக்கு வருகை தந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இனவெறி தாக்குதலில் பலியானது தேசத்தின் அவமானம். அந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது.
இந்திய ராணுவத்தில் இம்பாலைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அதிகமாக உள்ளனர். இம்பால் மக்களுக்கு எனது மரியாதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது கலாச்சாரத்துக்கும் எனது மரியாதைகள்.
வடகிழக்குப் பகுதி மக்களின் முன்னேற்றத்துக்காக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளது. வடகிழக்குப் பகுதிக்காக தனி அமைச்சரவையைத் துவக்கி, அதற்கென தனியாக நிதி ஒதுக்கியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.
எல்லை பாதுகாப்பு விஷயங்களில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்துவது இல்லை. எல்லைகளை அண்டை நாடுகளுக்கு தாரை வார்க்க தயாராக இருக்கிறது மத்திய அரசு.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர்சிடம் சரியான எல்லை பாதுகாப்பு கொள்கை இல்லாத காரணத்தால், மியான்மர் போன்ற அண்டை நாடுகளுக்கு, எல்லைப்பகுதிகள் பெருமளவில் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் மன்மோகன் சிங், ராஜ்யசபாவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இதுவரை என்ன செய்துள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் போல் எந்த பகுதியும் நாட்டில் பின் தங்கியில்லை என்றார்.
மோடி வருகைக்கு முன் தாக்குதல்
நரேந்திர மோடி இம்பாலில் பிரச்சாரம் மேற்கொள்ள வருவதற்கு சில நிமிடங்கள் முன் பாதுகாப்பு வாகனத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அசாம் ரைபில்ஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டார், பாதுகாப்பு வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.