நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்ற டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்டதுதான் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. பின்னாளில் பலத்த நஷ்டத்தை சந்தித்தது.

இந்த நஷ்டத்தை சரிகட்ட அப்பத்திரிகை நிர்வாகம் சுமார் 90 கோடி ரூபாய் வரை கடன்களை பெற்றிருந்தது. கட்சி விதிகளை மீறி இந்த கடன்களை தீர்க்க முடியாமல், அப்பத்திரிகை தவித்து வந்த நிலையில், சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் சேர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பணத்திலிருந்து கட்சி விதிமுறைகளை மீறி 90 கோடி ரூபாயை அப்பத்திரிகைக்கு அளித்து, கடனை அடைத்தனர்.
இதனிடையே நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கையகப்படுத்தி அதன் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொருளாளர் மோதிலால் வோரா, செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. இந்த சம்மனை எதிர்த்து சோனியா, ராகுல் உள்ளிட்ட அனைவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களது மனுக்களை கடந்த டிசம்பர் 7-ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சோனியாவும் ராகுல் காந்தியும் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். மேலும், சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறலாம் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications