எந்தெந்த அமைச்சர்களுக்கு பணம் கொடுத்தீர்கள்?: விகே.சிங்குக்கு ஷிண்டே, உமர் அப்துல்லா கேள்வி
டெல்லி: ராணுவ நிதி ஜம்மு காஷ்மீர் அரசுக்கு வழங்கப்பட்டது என்று முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் தெரிவித்தார். அந்த நிதி எந்தெந்த அமைச்சர்களிடம் வழங்கப்பட்டது என்பதை தங்களுக்கு தெரிவிக்குமாறு தேசிய மாநாட்டு கட்சி மற்றும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் வி.கே. சிங்கிடம் கேட்டுள்ளனர்.
முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் உமர் அப்துல்லா தலைமையிலான அரசை கவிழ்க்க சதி செய்ததாக முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. இதை மறுத்துள்ள சிங் தான் பணம் கொடுத்தது அரசை கவிழ்க்க அல்ல மாறாக சமூக நலத்திட்டங்களுக்காக கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ஜம்முவில் ஆளும் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், உமர் அப்துல்லாவின் முன்னாள் அரசியல் ஆலோசகருமான தேவேந்தர் ராணா கூறுகையில்,

ராணு நிதி வாங்கியவர்களில் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த அமைச்சர் யாராவது இருந்தால் அவர்களை உமர் அப்துல்லா உடனே பதவிநீக்கம் செய்வார். விவசாயத்துறை அமைசச்ர் குலாம் ஹஸன் மிர்ருக்கு ரூ. 1 கோடி அளிக்கப்பட்டது குறித்து அவர் மனசாட்சியுடன் பேச வேண்டும் என்றார்.
ராணுவ நிதியை வாங்கிய அமைச்சர்கள் யார், யார் என்ற விவரத்தை தெரிவிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே வி.கே. சிங்கிடம் கேட்டுள்ளார். இந்நிலையில் ராணுவத்திடம் இருந்து அமைச்சர்கள் பணம் பெற்றது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications