நாடு முழுவதும் ஒரே விலைதான் இருக்கணும்... காங். தேர்தல் அறிக்கை குழுவை மிரள வைத்த தொழிலதிபர்கள்
பெங்களூரு:நாடு முழுவதும், ஒரே இந்தியா.. ஒரே விலை என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்று காங்கிரசின் லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரிடம் தொழிலதிபர்கள், பொதுமக்கள் கருத்துகளை முன் வைத்தனர்.
லோக்சபா தேர்தலை முன்வைத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி அதி தீவிர பணிகளில் இறங்கியுள்ளன. பிரதமர் மோடி பிரச்சார பயணத்தை துவங்கி விட்டார். உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் கைகோர்ப்பு, கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு என அரசியல் களம் அதிர ஆரம்பித்துள்ளது.
லோக்சபா தேர்தலின் முன்னோட்டமாக, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொழிலதிபர்கள், மக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொழிலதிபர்கள் பங்கேற்பு
அந்த நிகழ்ச்சியில் காங்கிரசின் ராஜ்யசபா எம்பியான ராஜீவ் கவுடாவும் பங்கேற்றார். கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொது மக்கள், தன்னார்வ அமைப்பினர், தொழிலதிபர்கள் என பல தரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் கேட்பு
நிகழ்ச்சி தொடங்கியதும் பேசிய எம்பி ராஜீவ் கவுடா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள ஈடுபாட்டை விளக்கி பேசினார். தொழிலதிபர்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதாகும் என்று கூறினார்.
எண்ண ஓட்டங்களை அறிய
அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ப. சிதம்ரபரம் கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மக்கள் மனதில் உள்ள எண்ண ஓட்டங்களை அறிவதே இந்த கூட்டத்தின் நோக்கம். என்ன தங்களுக்கு வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களோ... அதை தேர்தல் அறிக்கையில் பதிவு செய்து நடைமுறைப்படுத்தும் திட்டம் உள்ளது.
5 ஆண்டுகள் பற்றி கூறுங்கள்
இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?நாட்டில் தற்போது தவறான செயல்கள், விஷயங்கள் அரங்கேறி வருகின்றன. அதை சரி செய்து அகற்ற வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் நமது நாடு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பதை கூறுங்கள் என்று பேசினார்.
வேலையில்லா திண்டாட்டம்
அதன் பிறகு கூட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வாருவரும் தங்கள் கருத்துகளை முன்வைத்து பேசினர். அவர்கள் கூறியதாவது, நாட்டில் தற்போது நிலவும் மிகப்பெரிய பிரச்னை வேலைவாய்ப்பின்மை. சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும்.
கூடுதல் முதலீடு
அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு திட்டங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதில் கூடுதலான முதலீடுகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி வரியில் இருந்து மருந்துகள், மருத்துவமனைகளுக்கு முழுமையான விதி விலக்கு அளிக்கவேண்டும். மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல திட்டங்களை மேலும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்று கூறினர்.
கடுமையாக பாதிப்பு
பலரும் பல கருத்துகளை கூறினாலும்.. சென்னையில் இருந்த இந்த நிகழ்ச்சிக்காக பெங்களுரு வந்த ரகுநாத் என்ற தொழிலதிபரும், அகில இந்திய உற்பத்தியாளர்கள் சங்க தலைவருமான அவரின் கருத்துகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அவர் கூறியதாவது:கிட்டத்தட்ட 17 மில்லியன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே விலைவாசி அவசியம்
ஒவ்வொருமுறையும்.. நாம் பேசுவதை விட்டுவிட்டு அதனை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கினால் நலமாக இருக்கும். நாடு முழுவதும் பெட்ரோல் உள்பட அனைத்து பொருட்களுக்கும் ஒரே விலை இருக்கவேண்டும் என்று பேசினார்.