தேனி நியூட்ரினோ ஆய்வகத்தை வேறு இடத்துக்கு மாற்ற முடியாது.. மத்திய அரசு திட்டவட்டம்
தேனியில் நியூட்ரினோ ஆய்வகத்தை வேறு இடத்துக்கு மாற்ற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தனர்.
டெல்லி: தேனியில் நியூட்ரினோ ஆய்வகத்தை வேறு இடத்துக்கு மாற்றவும் முடியாது, இதை கைவிடவும் முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
தேனி மாவட்டம், பொட்டிப்புரம் பகுதியில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு கடந்த 2003-இல் தொடங்கியது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வனச் செழுமையும் பெற்றுள்ள பகுதியில் இத்திட்டத்தைச் செயல்படுத்த வனத்துறையின் அனுமதியைப் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்காக, மலையைக் குடைந்து சுமார் 8 லட்சம் டன் பாறைகளை அகற்றவேண்டியது இருக்கும் என்பதாலு்ம இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு நிலவியது.
இந்நிலையில் இதுதொடர்பாக லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக இன்று பதில் அளித்தார்.
அதில் அவர் குறிப்பிடுகையில், தேனியில் உள்ள நியூட்ரினோ திட்டத்தை கைவிடும் எண்ணமும் இடம் மாற்றும் எண்ணமும் இல்லை. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைக்காததால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
நியூட்ரினோ குறித்து ஆய்வு நடத்த தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் வல்லுநர் குழுவை ஏற்படுத்தியுள்ளது. இதன் முடிவுகளின் படி இந்த திட்டம் விரைவில் இல்லையெனிலும் பின்னர் செயல்படுத்தப்படும். சுற்றுச்சூழல் அனுமதியை பசுவை தீர்ப்பாயம் ரத்து செய்துவிட்டதால் அதற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். மற்றபடி இந்த திட்டத்துக்கு கேரள அரசு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்க வில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.