என்.ஜி.ஓக்கள் தொடர்பான ஐ.பி. அறிக்கை: ஆம் ஆத்மி கண்டனம்
டெல்லி: என்.ஜி.ஓக்களின் செயல்பாடுகள் தொடர்பாக உளவுத் துறையான ஐ.பி., பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பிரதமர் அலுவலகத்துக்கு ஐ.பி. அமைப்பு ஒரு அறிக்கையை அனுப்பியிருந்தது. அதில் இந்தியாவில் செயல்படும் என்.ஜி.ஓக்கள் எனப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தது.
அத்துடன் கிரீன்பீஸ் அமைப்பு, கூடங்குளம் உதயகுமார் போன்றோரின் பெயரைக் குறிப்பிட்டும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
இந்த அறிக்கைக்கு என்.ஜி.ஓ கட்சி என்று விமர்சிக்கப்படுகிற ஆம் ஆத்மியும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவோரை குற்றவாளிகளாக்கும் நடவடிக்கை இது என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது.