காஷ்மீரில் தொடரும் போராட்டம்... பணம் எங்கிருந்து வருகிறது? விசாரணையில் வங்கிக் கணக்குகள்....
டெல்லி: காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது? என்றும் கடந்த மாதத்தில் சந்தேகப்படும்படியான பணப் பரிமாற்றங்கள் செய்துள்ள வங்கிக் கணக்குகளை பட்டியலிடும் பணியிலும் தேசிய புலனாய்வு ஏஜென்சி ஈடுபட்டுள்ளது.
புர்கன் வானி கொலைக்குப் பின்னர் காஷ்மீரில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை கண்டறியும் வேலையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சந்தேகப்படும்படியான பணப்பரிவர்த்தனை செய்துள்ள வங்கிக் கணக்குகளின் பட்டியலை தயாரித்து வருகிறது தேசிய புலனாய்வு ஏஜென்சி.
இதற்காக, காஷ்மீரில் உள்ள வங்கிகளை அணுகியுள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சி, சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குகளின் பட்டியலை கேட்டுத் திரட்டி வருகிறது. கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் இப்படி சந்தேகப்படும்படியான தொகை பல்வேறு வங்கிகளில் வைப்பாக உள்ளது என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
வங்கிகளின் ஒத்துழைப்போடு சந்தேகப்படும்படியான வங்கிக் கணக்குகளின் பட்டியல் தயாரிக்கப்பட்ட பின்னர் அந்தந்த கணக்காளர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது தேசிய புலனாய்வு ஏஜென்சி.