நைஜீரியர்களால் நாடு முழுக்க தொல்லைதான்.. கோவா சுற்றுலா துறை அமைச்சர் சுளீர் பேட்டி
கோவா: நைஜீரிய நாட்டுக்காரர்களால் கோவாவில் மட்டுமல்ல நாடு முழுக்க பிரச்சினைதான் ஏற்படுகிறது என்று கோவா மாநில சுற்றுலாத்துறை அமைச்சரே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியை தொடர்ந்து காங்கோ நாட்டில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இதனிடையே ஆப்பிரிக்கர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தியதோடு, வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்ஷங்கரை சந்தித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க மனு அளித்தனர்.
இந்நிலையில், கோவாவில் 31 வயது பெண் ஒருவரை இரு ஆப்பிரிக்க நாட்டவர்கள், கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து நிருபர்கள் கேள்விக்கு, கோவா சுற்றுலா அமைச்சர் திலிப் பருலேகர் கூறியதாவது: நைஜீரிய நாட்டு இளைஞர்கள் இந்தியாவில் போதை மருந்து கடத்துவதில் ஆரம்பித்து அனைத்து வகை குற்றங்களையும் செய்கிறார்கள்.
2 வருடங்கள் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் போக்குவரத்தையே முடக்கினர். இதுபோன்றவர்களுக்கு எதிராக நமது நாட்டில் வலுவான சட்டங்கள் தேவை. கோவாவில் மட்டுமல்ல இந்தியா முழுக்க நைஜீரியர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே பலாத்கார சம்பவம் தொடர்பாக ஒரு நைஜீரிய நாட்டுக்காரரை கைது செய்துள்ளதாக கோவா காவல்துறை தெரிவித்துள்ளது.