ரொம்ப பேசினா... வீட்டில் சமைப்பதற்கும் வரி விதிப்போம்... நிர்மலா சீதாராமனின் மறைமுக வார்னிங்?
வீட்டில் சமைப்பதற்கு அரசு வரிவிதிக்கவில்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதை மறைமுக எச்சரிக்கையாக பார்க்கின்றனர்.
சென்னை: உணவு பொருள்களின் விலையேற்றம் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள கருத்து மக்களுக்கு எச்சரிக்கை விடும்படியாகவே பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் ஒரே பொதுவான வரிக்கு வித்திடும் ஜிஎஸ்டி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நகைகள், வீட்டு உபயோக பொருள்களின் விலை அதிகரிக்கும் என்பதால் கடந்த 30-ஆம் தேதி வரை விற்பனை ஜரூராக நடைபெற்றது.
ஜிஎஸ்டி எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து வலைதளங்களில் பயன்பாட்டாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்து வருகின்றனர்.
மத்திய அரசு பெருமிதம்
ஜிஎஸ்டி அறிமுக விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ஜிஎஸ்டியை அறிமுகம் செய்து இந்தியாவின் வருங்காலத்திற்கு புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு இந்திய ஜனநாயகத்தின் மாண்பை காட்டுகிறது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த உதாரணமாக ஜிஎஸ்டி விளங்குகிறது என்று பேசினார்.
விலை உயராது
மேலும் ஜிஎஸ்டியால் விலை குறைப்பு ஏற்படுமே ஒழிய விலையேற்றம் நடைபெறாது. இதனால் எந்த தரப்பினரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு கூறியதற்கு மாறாக ஹோட்டல் உணவு பொருள்களின் விலைக்கு அதிகமாக ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அமைச்சரின் அடடே விளக்கம்
அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வீட்டில் சமைத்து உண்பவர்களுக்கு அரசு எந்த வரிவிதிப்பையும் விதிக்கவில்லை என்று பொறுப்பில்லாமல் கூறியுள்ளார்.
மறைமுக வார்னிங்
அவர் கூறுவதை பார்த்தால் வீட்டில் உணவு சமைப்பதற்கு வரி விதிக்கவில்லையே என்று சந்தோஷப்பட சொல்கிறாரா அல்லது இதுபோல் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தால், வீட்டில் உணவு சமைப்பதற்கும் வரி விதிக்கப்படும் என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கிறாரா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹோட்டல்களுக்கு எதிரான கருத்து
அமைச்சரின் இந்த விளக்கத்தின் மூலம் யாரும் ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட வேண்டாம் என்று அவர் கூறி தங்கள் பிழைப்பில் மண் அள்ளி போடுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் என வஞ்சம் இழைத்துவிட்டு தற்போது ஹோட்டல் தொழிலுக்கே மூடுவிழா நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.