ஆந்திரா மூலமாக நாடாளுமன்றத்திற்குள் நுழையும் 'ஸ்ரீரங்கம்' நிர்மலா சீதாராமன்
ஹைதராபாத்: திருச்சி, ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும், மத்திய அமைச்சருமான நிர்மலா சீதாராமன், ஆந்திராவிலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாகவுள்ளார்.
தமிழகத்தை பூர்வீமாகக் கொண்டவராக இருந்தாலும் கூட நிர்மலாவின் புழக்கமெல்லாம் ஆந்திராவாகத்தான் உள்ளது. மேலும் அவர் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக மாறிய பின்னர்தான் அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றே பலருக்கும் தெரிய வந்தது.

இந்த நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த்தும், இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார் நிர்மலா. தற்போது அவர் எம்.பியாக இல்லை. 6 மாதத்திற்குள் அவர் எம்.பியாக வேண்டும்.
இதையடுத்து அவர் ஆந்திராவிலிருந்து ராஜ்யசபாவுக்குப் போட்டியிடவுள்ளார். முன்னாள் முதல்வரான ஜனார்த்தன ரெட்டி சமீபத்தில் மரணமடைந்ததால், அவர் வகித்து வந்த ராஜ்யசபா எம்.பி பதவி காலியாகியுள்ளது. இதற்கு அடுத்த மாதம் 3ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடத்தில் நிர்மலா போட்டியிடவுள்ளார்.
நிர்மலாவை வேட்பாளராக்க ஆந்திர மாநில பாஜக முடிவு செய்து கட்சி மேலிடத்திற்குத் தெரிவித்துள்ளது. இதையடுத்து கட்சி மேலிடம் நிர்மலாவின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஜூலை 3ம் தேதி நடைபெறும் தேர்தலில் நிர்மலா சீதாராமன் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார்.












Click it and Unblock the Notifications