வருமான வரியில் மாற்றமில்லை.. அப்படியும், 3 லட்சம் நீங்க கூடுதல் சலுகை பெற முடியும்! எப்படி தெரியுமா?
டெல்லி: நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பு விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் கொண்ட தனி நபர்களுக்கு, வருமான வரி கிடையாது என்றும், அதற்கு மேல் உள்ள வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் அறிவித்தார்.
இடைக்கால பட்ஜெட்டில் இது அறிவிக்கப்பட்ட விஷயம்தான் என்பதால், இதில் புதுமை எதுவும் கிடையாது.
ஆனால் இருவகைகளில், வருமான வரிதாரர்களுக்கு சலுகை செய்யப்பட்டுள்ளது இந்த பட்ஜெட்டில். அதில் ஒன்று வீட்டுக்கடன் மீதான மேலும் ஒன்றரை லட்சம் அளவுக்கான கடன் மீதான, வட்டிக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குடியிருக்கும் வீடுகள்
அதாவது தற்போது வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள தொகையை காட்டிலும் கூடுதலாக ஒன்றரை லட்சம் ரூபாயை இனி, கணக்கில் காட்டிக்கொள்ளலாம். உரிமையாளர்கள், தாங்களே குடியிருக்கும் வீடுகளுக்குதான் இது பொருந்தும். வாடகைக்கு வீடுகளை விட்டிருந்தால் கிடையாது.
எலக்ட்ரிக் வாகனங்கள்
மற்றொரு சலுகை என்னவென்றால், எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான கடனுக்கான வட்டியிலும், ஒன்றரை லட்சம் ரூபாய் வரி சலுகை உள்ளது. அதாவது நீங்கள் இப்போது ஒரு எலக்ட்ரிக் வாகனத்தை கடன் மூலமாக வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. அந்த கடனுக்கு நீங்கள் செலுத்தக்கூடிய வட்டியில் ஒன்றரை லட்சம் ரூபாயை வருமான வரி செலுத்தாமல் விலக்கு பெற கணக்கு காட்டிக்கொள்ளலாம்.
3 லட்சம் வரி விலக்கு
இதன் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரசு நினைக்கிறது. எனவே வீட்டுக்கடன் மீதான வரி சலுகை மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் மீதான வரி சலுகை ஆகிய இரண்டையும் கூட்டினால், சுமார் 3 லட்சம் வரையில் வருமான வரி விலக்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பணக்காரர்களுக்கு கூடுதல் வரி
எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கினால் கலால் வரியும் கிடையாது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பணக்காரர்களுக்கு சில செக் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1 கோடிக்கு மேல் ஒரே வங்கியில் பணம் எடுத்தால் 2 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். 2 முதல் 5 கோடி வரையிலான வருவாய் பெறுவோருக்கு கூடுதலாக 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 5 கோடிக்கும் மேல் ஆண்டு வருவாய் உள்ளோருக்கு 7 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.