அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு!
ஹைதராபாத்: சீமாந்திராவில் ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததைத் தொடர்ந்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத அவர், 6 மாதத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது ராஜ்யசபா உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், டெல்லி ராஜ்யசபா உறுப்பினருமான ஜனார்த்தனரெட்டி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அங்கு ஜூலை 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருந்தது. இதையடுத்து, நிர்மலா சீதாராமன் ஆந்திர மாநில சட்டசபை செயலாளரிடம் தனது வேட்பு மனுவை கடந்த 21ஆம் தேதி தாக்கல் செய்தார்.
இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவதற்கான கால அவகாசம் முடிந்து விட்ட நிலையில், நிர்மலா சீதாராமன் தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. எனவே, நிர்மலா சீதாராமன் ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இதைத்தொடர்ந்து வரும், ஜூலை 7ஆம் தேதி நாடாளுளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அப்போது ராஜ்யசபா கூடும் போது, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி, நிர்மலா சீதாராமனுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.