பீகாரில் அரசியல் அதிரடி.. முதல்வர் பதவியை தூக்கி எறிந்தார் நிதிஷ் குமார்
பாட்னா: பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், முதல்வர் நிதீஷ்குமார்.
பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்டீரிய ஜனதா தளமும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன.
முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்டிர ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியும் உள்ளனர்.
லாலுவின் ரயில்வே ஹோட்டல்கள்
இந்த நிலையில் 2006ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே ஓட்டல்களை வாடகைக்கு விட்டதில் பல கோடிக்கு மோசடி செய்திருப்பதாக கூறி கடந்த மாதம் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தேஜஸ்வி பெயரும் இடம் பெற்றுள்ளது. இது நிதீஷ் குமாருக்கு கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
விளக்கம் அளிக்க உத்தரவு
ஊழல் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க அவர் தேஜஸ்விக்கு உத்தரவிட்டார். ஆனால் லாலு பிரசாத் குடும்பத்தினர் அதை கண்டு கொள்ளவில்லை. தேஜஸ்வி, துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்றும் லாலு அறிவித்தார். இதனால் ஐக்கிய ஜனதா தளத்துக்கும், ராஷ்ட்டீரிய ஜனதா தளத்துக்கும் இடையே மோதல் முற்றியது
முற்றிய மோதல்
இரு கட்சிகளுக்கும் சமரசம் செய்ய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் நிதீஷ் குமார் தனது முடிவில் மிகவும் உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார். 28ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் அறிவித்தார்.
அதிரடி முடிவு
நிதிஷ்குமாரின் புதிய கெடு காரணமாக பீகார் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் இதுபற்றி ஆலோசிக்க புதன்கிழமை ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நிதீஷ்குமார் கூட்டினார். அதில் முதல்வர் பதவியை நிதீஷ்குமார் ராஜினாமா செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாலை சுமார் 6.45 மணியளவில் ராஜ்பவனுக்கு சென்ற நிதிஷ்குமார் ஆளுநர் கேசரி நாத் திரிபாதியிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.