பீகார் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு! - பெரும்பான்மையை நிரூபிக்கிறார் நிதிஷ்குமார்
கூட்டணி மாறி ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் நாளை பீகார் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.
பாட்னா : காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்த நிதிஷ்குமார், இன்று பாஜகவும் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் நாளை அவர் பீகார் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.
ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்துடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பீகார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் நேற்று திடீரென்று ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க முடிவு செய்தார்.
நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பீகார் மாநில பாரதீய ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி நேற்று மாலை கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, நிதிஷ்குமார் புதிய அரசு அமைக்க பாரதீய ஜனதா ஆதரவு அளிப்பதாக கூறி கடிதம் கொடுத்தார்.

பொறுப்பேற்பு
இதையடுத்து, பாரதீய ஜனதா ஆதரவுடன் இன்று நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்வராக சுஷில் குமார் மோடி பதவியேற்றுள்ளார். நிதிஷ்குமாரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர் திரிபாதி, 2 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.

நாளை பெரும்பான்மை வாக்கெடுப்பு
இந்நிலையில் ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமார் நாளை சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கிறார். பீகார் சட்டசபையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 71 எம்எல்ஏக்கள் உள்ளனர். லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு சட்டசபை உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 27 எம்எல்ஏக்களும், பாஜகவிற்கு 53 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

132 பேரின் ஆதரவு
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு 80 உறுப்பினர்கள் இருந்தாலும் காங்கிரஸ் மற்றும் இதர ஆதவு கட்சிகளின் எம்எல்ஏக்களையும் சேர்த்து 110 மட்டுமே உள்ளனர். நிதிஷ்குமாருக்கு ஜனதா தளக் கட்சியின் 71 எம்எல்ஏக்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவும் சேர்த்து 132 பேரின் ஆதரவு உள்ளது.

சிக்கல் இல்லை
பீகார் சட்டசபையில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122 பேரின் ஆதரவு கிடைத்தாலே நிதிஷ்குமார் பெரும்பான்மை பெற்றுவிடுவார். ஆனால் நிதிஷ்குமாருக்கு கூடுதலாக 10 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் பெரும்பான்மை நிரூபிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications