நாளிதழ்களில் இன்று : ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஆளே இல்லை
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினமணி
கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முன்வந்தாலும், இந்த நிறுவனத்தைக் கையகப்படுத்த இதுவரை எந்த நிறுவனத்துக்கும் தைரியம் வரவில்லை என்றும், ஏர் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தபோதிலும், இதுவரை எந்த நிறுவனமும் பங்குகளை வாங்க முன் வராததால், இந்த விவகாரம் இழுபறியில் நீடித்து வருவதாகவும் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ரயில்வே துறையில் பயன்பாடின்றி இருக்கும் 12,066 ஏக்கர் நிலங்களை விற்பனை செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது என்றும், இந்த நிலத்தை நெடுஞ்சாலை திட்டம், சாலை வசதி உள்ளிட்ட திட்டங்களுக்காக மாநில அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற செய்தியையும் தினமணி வெளியிட்டுள்ளது,
தினத்தந்தி
உத்தரகாண்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இந்த நியமனத்தை மறு ஆய்வு செய்யுமாறு கூறி, கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இந்நிலையில் கொலிஜியத்தின் பரிந்துரை திருப்பி அனுப்பப்பட்டது முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'கொலிஜியம் பரிந்துரை விவகாரத்தில் நடக்கக்கூடாதது நடந்திருக்கிறது. அதுதான் பொதுவான எண்ணம்' என்றார்.
தி இந்து (தமிழ்)
மதுரை மற்றும் சேலத்தில் நீட் தேர்வு மையத்தில் தமிழுக்குப் பதிலாக இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டது. இந்தக் குளறுபடியால் சுமார் 5 மணி நேர தாமத்துக்குப் பிறகு நீட் தேர்வு தொடங்கியது என தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், இந்தியாவில் போதுமான அளவில் ரொக்கம் இருக்கிறது. ரூ.100,ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் தேவையான அளவுக்கு இருக்கின்றன. இருந்தாலும் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு ரூ.3,000 கோடி அளவுக்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன என பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார் என்ற செய்தியும் தி இந்து (தமிழ்) நாளிதழில் இடம்பெற்றுள்ளது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
நேற்று நடைபெற்ற நீட் தேர்வினை தமிழகம் முழுவதும் 1.07 லட்ச மாணவர்கள் எழுதினார்கள். அதில் 24,720 மணவர்கள் தமிழில் தேர்வு எழுதியுள்ளனர். மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், நீட் தேர்வில் இயற்பியல் தொடர்பான கேள்விகள் கடினமானதாக இருந்ததாகக் கூறியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தி இந்து
''மோடி அலை இப்போது சுனாமியாகிவிட்டது. இது அனைத்து எதிரிகளையும் தூக்கி எறிந்து, தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறுவதை உறுதி செய்யும்'' என கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா கூறியுள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
- நீட் தேர்வு பயண தூரத்தில் சீனா-வட கொரியா இடையே 3 முறை போகலாம் - வரைபட விளக்கம்
- நீட் தேர்வு மைய சர்ச்சை: தமிழக அரசு நீதிமன்றத்தில் எப்படிச் செயல்பட்டது?
- வடமாநில நீட் மையங்கள் மாணவர்களே தேர்வு செய்ததா? சிபிஎஸ்இ கருத்தால் சர்ச்சை
- ''நீட் தேர்வு வேண்டாம் என்று தொடர்ந்து போராடுவோம்''
- நீட்: ஹால் டிக்கெட் குழப்பத்தால் தேர்வு எழுத முடியாத ராசிபுரம் மாணவி