சென்னை ஹைகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு எந்த வழக்கையும் ஒதுக்க கூடாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி
டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய நீதிபதி கர்ணனுக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருபவர். நீதித்துறை பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல்களுக்கு முதலில் தடை விதித்தார். அந்த தடைக்கு சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் பெஞ்ச் தடை விதித்தது.
ஆனால் இது செல்லாது என ஒரு தீர்ப்பு அளித்த கர்ணன், தாம் தலித் என்பதால் பழிவாங்கப்படுவதாக தலைமை நீதிபதி கவுல் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடமும் புகார் செய்தார். இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார்.
அப்போதைய தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச், கர்ணனின் அனைத்து உத்தரவுகளுக்கும் தடை விதித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி கர்ணனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தாம் போராடப் போவதாக நீதிபதி கர்ணன் கூறியிருந்தார்.
இதனிடையே கர்ணனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்திருந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதி கர்ணனுக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.