"சின்னம்மா"வுக்கு பழம், பிஸ்கட் கூட கொடுக்க முடியாமல் போச்சே.. ஏமாற்றத்தில் வக்கீல்கள்!
சசிகலாவுடன் வழக்கறிஞர்கள் வாங்கி சென்ற பிஸ்கெட், பழங்களை அவருக்குக் கொடுக்க சிறைத் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூர்: சசிகலாவுக்கு விஐபி சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரது வழக்கறிஞர்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கொண்டு சென்ற பழங்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகளை கொடுக்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா, பரப்பன அக்ரஹார சிறையில் விதிகளை மீறி பார்வையாளர்களை சந்தித்து வருகிறார் என்று ஆரம்பம் முதலே குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா, அந்தச் சிறையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார்.

இன்டக்ஷன் ஸ்டவ்
சசிகலாவுக்கு நவீன சமையலறை அமைக்கப்பட்டு, அவர் விரும்பிய உணவைச் சமைத்து உண்ண இன்டக்ஷன் ஸ்டவ் இருந்ததும் அவருக்கென்று 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இந்த வசதிகளைப் பெற சிறைத் துறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ. 2 கோடியை லஞ்சமாகக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ரூபா இடமாற்றம்
இதை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா மற்றும் ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் அதிகாரிகள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் சசிகலாவுக்கு வழங்கப்பட்டு வந்த விஐபி சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. அவருக்கு சாதாரண அறையும், உணவும், கைதிகள் ஆடையும் வழங்கப்பட்டதாக ஏடிஜிபி மெக்ரிக் தெரிவித்தார்.

தினகரனுக்கு அனுமதி மறுப்பு
சசிகலா அளவுக்கு அதிகமாக 13 முறை பார்வையாளர்களை சந்தித்ததாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில் சிறை அதிகாரிகள் தற்போது பார்வையாளர்களை அனுமதிக்க கடும் நெருக்கடி கொடுக்கிறார்கள். அதனால் தான் கடந்த 20-ஆம் தேதி நேரம் தவறி வந்த டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் வாக்குவாதம்
இந்நிலையில் சசிகலாவை சந்திக்க அவரது வழக்கறிஞர்கள் அசோகன், மூர்த்திராவ், மகேஷ் ஆகியோர் நேற்று சிறைக்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பிஸ்கெட், பழங்கள்
வழக்கறிஞர்கள் சிறைக்குள் செல்லும் போது பிஸ்கெட், பழங்களை சசிகலாவுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. வெளியிலிருந்து கொண்டு வரும் உணவுப் பொருள்களை சசிகலாவுக்கு கொடுக்க சிறைத் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் சசிகலாவே அந்த உணவு பண்டங்கள் வாங்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications