மோடி அலை எல்லாம் வீசவில்லை, நாங்கள் தான் மீண்டும் ஆட்சி அமைப்போம்: ஷிண்டே நம்பிக்கை
மும்பை: நாட்டில் மோடி அலை ஒன்றும் வீசவில்லை, மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் ஆட்சிக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் சோலாபூர் நகரில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். இதையடுத்து காங்கிரஸ் பவனில் நடந்த கூட்டத்திலும் பங்கேற்றார். சோலாபூரில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாட்டில் மோடி அலை எல்லாம் வீசவில்லை. 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜக இந்தியா ஒளிர்கிறது என்று பிரச்சாரம் செய்தது. ஆனால் அது வெறும் பொய் தான். தற்போது சில சேனல்களில் மோடி அலை வீசுவதாக கூறப்படுகிறது. அது முற்றிலும் தவறு. நாட்டில் மோடி அலை வீசுகிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியிடம் கேளுங்கள்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி நன்றாக உள்ளது. முன்னேற்றம் குறித்து பேசாமல் அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவது வருத்தம் அளிக்கிறது என்றார்.
நாட்டில் மோடி அலை அல்ல பாஜக அலை தான் வீசுகிறது என்று முரளி மனோகர் ஜோஷி தெரிவித்திருந்தார். அதனால் தான் அவரிடம் கேட்குமாறு ஷிண்டே கூறியுள்ளார்.