நல்லா இருக்கேன்... உடல் பரிசோதனையெல்லாம் வேண்டாமே.... மருத்துவர்களிடம் சொன்ன யாகூப் மேமன்
மும்பை: தாம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதால் பரிசோதனைகள் எதுவும் வேண்டாம் என்று தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக யாகூப் மேமன் மருத்துவர்களிடம் கூறியுள்ளதாக சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
1993ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமன் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் சிறையில் இன்று காலை 6.20 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். அவரது உயிர் பிரிந்ததை காலை 7.01க்கு மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக யாகூப் மேமனை நடைமுறைகளின்படி மருத்துவர்கள் பரிசோதிக்க சென்றனர். அப்போது தாம் நலமுடன் இருக்கிறேன்.. எதற்கு உடல் பரிசோதனையெல்லாம் என்று மருத்துவர்களிடம் மேமன் கூறியுள்ளார். இருப்பினும் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு ஒருவரை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது நடைமுறை என்று மேமனிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதன் பின்னர் மேமன் உடல்நிலை இயல்பானதாக இருக்கிறது..எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர். மேலும் சிறை சகாக்களிடம், தமக்கு நீதி வழங்கப்படவில்லை என்று மேமன் கூறியிருந்திருக்கிறார். தம்முடைய வழக்கில் உச்சநீதிமன்றம் கடுமை காட்டியது குறித்த கவலையையும் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். நேற்று இரவே சக கைதிகளுக்கு குட் பை சொல்லியும் இருக்கிறார் மேமன்.
மேமன் தூக்கிலிடப்பட்ட நிலையில் சிறைக்கு வந்த குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்வது தொடர்பாக சிறை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் சிறை நிர்வாகமோ, மேமன் உடலை ஒப்படைத்தால் பிரச்சனைகள் வரும் எனக் கூறி மறுத்திருக்கின்றனர். இருப்பினும் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்கிறோம் என மேமன் குடும்பத்தினர் உறுதி அளித்தனர்.