டெல்லியை ஆளப்போவது யார்?... அரசியல் வானிலை மாறுமா?!
டெல்லி: இந்தியாவில் உள்ள அரசியல் நோக்கர்களின் பார்வைகள் அனைத்தும் டெல்லியை நோக்கி திரும்பியுள்ளது. ஏனெனில் அங்கு இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 32 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும் வென்றன. காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், யாரை எதிர்த்து அரசியலுக்கு வந்ததோ அதே காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்தது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரானார்.
ஆனால் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, 49 நாட்களில் ஆம் ஆத்மி ஆட்சி முடிவுக்கு வந்தது. டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.
இதோ 13 மாதங்களில் மீண்டும் ஒரு சட்டசபை தேர்தலை சந்திக்கிறது டெல்லி. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது
தேர்தல்களம்.
காரணம் அம்மாநில முதல்வர் வேட்பாளர்கள்தான். ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் தேர்தலை சந்திக்க, பாஜகவோ கிரண்பேடியை களமிறக்கியுள்ளது. இதனால் சட்டசபை தேர்தலில் அனல் பறக்கிறது.
கவுரவப்பிரச்சினை
டெல்லி மாநிலத்தை ஆள வேண்டும் என்பது தேசியக் கட்சிகளின் கவுரவமாகப் பார்க்கப்படுகிறது எனவேதான் 70 தொகுதிகளில் 40 இடங்களை பிடித்து ஆட்சிக்கட்டிலில் பெரும்பான்மையுடன் அமரவேண்டும் என்ற முனைப்போடு அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன.
அனல் பறக்கும் பிரச்சாரம்
பிப்ரவரி 7ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நாள்முதலே அங்கு பிரசாரத்தில் அனல் பறக்கிறது. முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே களமிறங்கியது பாஜக.
கருத்துக்கணிப்புகள்
எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை அறிய கடந்த ஜனவரி மாதம் ஏபிபி நியூஸ், நீல்சன் நிறுவனம் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் டெல்லி சட்டசபையில் உள்ள 70 இடங்களில் பாஜக 34, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டது. டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் யாரும் ஆட்சி அமைக்க முடியாதபடி இழுபறியே ஏற்படும் என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்தது. டெல்லியில் ஒரு கட்சி தனித்து ஆட்சிஅமைக்க வேண்டுமானால் 36 இடங்கள் வேண்டும். இந்த மேஜிக் எண்ணை எந்த கட்சியும் எட்டாது என்றும் தெரிவித்தது.
உயர்ந்த செல்வாக்கு
கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 31, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. இந்த முறை பாஜகவுக்குகூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு 17 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. ஒரே மாதத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு மீண்டும் செல்வாக்கு உயர்ந்ததுள்ளது.
கிரண்பேடி
இந்தமுறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜ தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10ஆம் தேதி டெல்லியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இது பாஜக தொண்டர்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜக முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி அறிவிக்கப்படவே பாஜகவின் மீதான எண்ணம் வாக்காளர்கள் மத்தியில் சற்றே உயர்ந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
காலியான கூடாரம்
காங்கிரஸ் கட்சி 5 முதல் 8 இடங்களே பெறும் என்று எல்லா கருத்துக்கணிப்புகளிலும் கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி இந்த முறை கவுரவமான இடங்களை பெற வேண்டும் என அக்கட்சித்தலைவர்களும், தொண்டர்களும் கடுமையாக உழைத்து வருகின்றனர். துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் மோடியை சாடி வருகிறார். அது கைகொடுக்குமா என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.
வாக்கு சதவிகிதம்
கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. 2013ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 30 சதவிகித வாக்குகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி, லோக்சபா தேர்தலில் 33 சதவிகித வாக்குகளை பெற்றது. ஜனவரி மாத கருத்துக்கணிப்பில் 35 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவிற்கு எத்தனை
அதே சமயம் 2013ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 33 சதவிகிதம் வாக்குகளைப் பெற்ற பாஜக, 2014 பொதுத்தேர்தலில் 47 சதவிகிதம் பெற்றது. கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜகவிற்கு 39 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 25 சதவிகிதமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதம் 16 சதவிகிதமாக தேய்ந்துள்ளது.
சட்டசபையும் லோக்சபா தேர்தல்களும்
லோக்சபா தேர்தல்களில் ஒரு கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதமே அதற்கு அடுத்த சட்டசபை தேர்தல்களிலும் எதிரொலிக்கும் என்று கூற முடியாது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை விட அகாலிதளம், இந்திய தேசிய லோக் தளம் கட்சிகள் அதிக அளவில் வாக்குகளை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஊசலாட்ட நிலை
சில கருத்துக்கணிப்புகள் ஊசலாட்டநிலையை தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் 8 இடங்களை கைப்பற்றியது. அது 5ஆக குறையும் பட்சத்தில் மூன்று இடங்கள் பாஜக பக்கம் சாய வாய்ப்புள்ளது. அதே போல கடந்த முறை 28 இடங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சி இம்முறை 21 இடங்களை மட்டுமே பெறும் என்றும் ஆம் ஆத்மி வென்ற இடங்களை இம்முறை பாஜகவே கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது. கூட்டிக்கழித்து பார்த்தால் பாஜகவிற்கு 44 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அரசியல் சதுரங்கத்தில்
கடந்த முறை அடித்து பிடித்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த ஆம் ஆத்மி கட்சி அதனை தக்கவைக்காமல் உதறிவிட்டு சென்றது. ஆனால் இம்முறை அது ஆட்சிக்கட்டிலில் அமருவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்கின்றனர். ஆனாலும் அரசியல் சதுரங்க விளையாட்டில் எதுவும் நடக்கலாம் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெற்று வென்றால் அது 'கருப்பு அன்னத்தை' கண்டது போலவோ, அல்லது 'மனிதன் நாயை கடித்த கதை'யாகவோ வியப்பிற்குரியதாகவே இருக்கும் என்பது உறுதி.