நுபுர் சர்மா சர்ச்சை.. ராஞ்சியில் முஸ்லீம்கள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி
ராஞ்சி: இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டம் வன்முறையான நிலையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உள்பட 2 முஸ்லிம்கள் இறந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதத்தில் சர்ச்சையாக பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் மட்டுமின்றி, கத்தார், சவுதி அரேபியா உள்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பின.
FACT CHECK: நபிகள் நாயகம் குறித்த அவதூறு.. இந்தியாவை கண்டித்ததா நித்தியானந்தாவின் கைலாசா?
நாடு முழுவதும் வெடித்த போராட்டம்
இந்நிலையில் நேற்று இந்தியாவின் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் மக்கள் போராட்டம் நடத்தினர். நுபுர் சர்மாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அவர்கள் நுபுர் சர்மாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிக்காட்டினர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத், சகாரன்பூர், காஷ்மீரில் ஜம்மு, மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா, பஞ்சாப் மாநிலம் லூதியானா, தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன. மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.
ராஞ்சியில் மனித சங்கிலி போராட்டம்
இதேபோல் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொழுகையை முடித்த முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஞ்சியில் தொரண்டா ரஸ்லதர்பாபா மசார் மற்றும் இக்ரா மசூதி ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் திரண்டனர். இதில் தொரண்டா ரஸ்லதர்பாபாவில் இருந்து ராஜேந்தர் சவுக் வரை சென்று போராட்டம் நடத்தினர்.
Recommended Video
வெடித்த வன்முறை
இக்ரா மசூதி அருகே மனித சங்கிலி மூலம் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த மனித சங்கிலி போராட்டம் தினசரி மார்க்கெட் நோக்கி சென்றது. அப்போது ஹனுமன் கோவில் அருகே சென்றபோது திடீரென்று கல்வீசப்பட்டது. இது இருதரப்பு மோதலாகி வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். ஆனால் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை. அதேநேரத்தில் கல்வீச்சில் போலீசார் காயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி
இதையடுத்து போலீசாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இஸ்லாம் நகரை சேர்ந்த 15 வயது நிரம்பிய முதாசீர், மற்றும் மகாத்மா காந்தி ரோட்டில் உள்ள கிறிஸ்டியா நகரை சேர்ந்த ஷாகீல் ஆகியோர் குண்டு பாய்ந்து இறந்தனர். மேலும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயமடைந்தனர்.
ஊரடங்கு
மேலும் மூத்த போலீஸ் சூப்பிரண்டு சுரேந்திர குமார் ஷா உள்பட 10க்கும் அதிகமாக போலீசார் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வன்முறையால் ராஞ்சியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ராஞ்சி மெயின்ரோடு, தினசரி மார்க்கெட் ஆகிய இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி டிஐஜி அனிஷ் குப்தா கூறுகையில், ‛‛நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. வன்முறை நடந்தபோது அவர்களை அமைதி வழியில் திரும்பி செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.