என்ன இருந்தாலும் ஒபாமா அப்படி பேசியிருக்க கூடாது... ராஜ்நாத்சிங் அதிருப்தி
டெல்லி: இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியது தேவையற்றது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதசார்பின்மை மீது பாஜகவுக்கு முழு நம்பிக்கை உள்ளது. தாய்மதம் திரும்பும் நிகழ்ச்சிக்கு பாஜக ஆதரவு அளிக்கவில்லை. மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிவடைய விடமாட்டோம். மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க தனிப்பட்ட நபர்களையோ, இயக்கங்களையோ அனுமதிக்க மாட்டோம்.

எனவே ஒபாமாவின் பேச்சு துரதிருஷ்டவசமானதாகும், இந்தியா அனைத்து நாடுகளுடனும் நல்ல நட்புறவை மேம்படுத்த முயன்று வருகிறது. டெல்லியில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது பயணத்தின் நிறைவு நாளின்போது, மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது, மதத்தின் பெயரால் மக்கள் பிளவுபடாதவரை இந்தியா முன்னேறும் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் சமீபகாலமாக நடைபெறும் தாய்மதம் திரும்பும் நிகழ்ச்சிகளை கருத்தில் வைத்தே ஒபாமா இவ்வாறு பேசியதாக கூறப்பட்டது. இந்நிலையில்தான் ராஜ்நாத்சிங் பதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications