‘மறக்க முடியாத இந்தியப் பயணம்’... ‘வணக்கம்’ கூறி சவுதி புறப்பட்டார் ஒபாமா
டெல்லி : குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.
இந்தியாவின் 66வது குடியரசு தினம் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்பதற்காக நேற்று முன் தினம் இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று குடியரசு தின விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.
ஒபாமாவின் இந்திய பயணத்தின் கடைசி நாளான இன்று, டெல்லி ஃபோர்ட் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றினார் ஒபாமா. அதனைத் தொடர்ந்து, மதியம் 2 மணிவாக்கில் சிறப்பு விமானம் மூலம் அவர் சவுதி அரேபியா புறப்பட்டு சென்றனர். விமானத்தில் ஏறிய ஒபாமா , அவரது மனைவி மிஷல் இருவரும் இரு கரம் எடுத்து வணங்கி வணக்கம் சொல்லி சிரித்த படி கிளம்பினர்.

இவரது பயணம் தொடர்பாக ஒபாமா சார்பில் வெள்ளை மாளிகை தனது டுவிட்டரில் மறக்க முடியாத இந்திய பயணம் என்றும், தங்களுக்கு அளித்த சிறப்பு வரவேற்பும், பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களின் அன்பான வரவேற்பும் என்றும் எங்கள் நினைவில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலைச் சென்று பார்க்க ஒபாமா திட்டமிட்டிருந்தார். ஆனால் சவுதி மன்னர் அப்துல்லாவின் மறைவால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. எனவே, இது தொடர்பாக விமானம் ஏறுவதற்கு முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மிஷல் ஒபாமா, ‘தாஜ்மகால் பார்க்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. ஆனாலும் விரைவில் பார்க்க இந்தியாவுக்கு மீண்டும் வருவேன்' என்றார்.
டுவிட்டரில் வாழ்த்து :
இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அதிபர் ஒபாமாவின் பயணத்தினால் , இந்தியா- அமெரிக்கா உறவு புதிய பாதைக்கு சென்றுள்ளது. ஒபாமாவின் பாதுகாப்பான பயணத்திற்கு வாழ்த்துக்கள் !' என தெரிவித்துள்ளார்.
நன்றி... நன்றி... நன்றி...
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் இறங்கியபோது டுவிட்டரில் ஜெய் ஹிந்த் என குறிப்பிட்ட வெள்ளை மாளிகை, ஒபாமா விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு கொண்டிருந்த நிமிடத்தில் ‘இந்தியாவுக்கு நன்றி' தெரிவித்தது












Click it and Unblock the Notifications