பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்கை வளைத்துப் பிடிக்க உதவிய 'ஆக்டோபஸ்'!
புத்தூர்: அத்வானி வருகையின்போது வெடிகுண்டு வைத்தது உள்பட பல்வேறு சட்டவிரோத வழக்குகளில் சிக்கித் தலைமறைவாக இருந்து வந்த பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகிய இருவரையும் புத்தூரில் மடக்கப் பிடித்த தமிழக போலீஸாருக்கு பெருமளவில் உதவியாக இருந்துள்ளனர் ஆந்திர மாநில தீவிரவாத ஒழிப்புப் பிரிவான ஆக்டோபஸ் படையின் அதிரடி வீரர்கள்.
Organization To Counter Terrorist Operations என்ற பெயரின் சுருக்கே இந்த ஆக்டோபஸ்.
ஆந்திர மாநிலத்தில் தீவிரவாதிகளைப் பிடிக்கவும், தீவிரவாத செயல்களைத் தடுக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டதே இந்த சிறப்பு் போலீஸ் படை. இதுதான் இஸ்மாயிலையும், பிலால் மாலிக்கையும் பிடிக்க தமிழக போலீஸ் படைக்கு உதவியுள்ளது.
2007ம் ஆண்டு உருவான ஆக்டோபஸ்
2007ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ஆக்டோபஸ் படையை உருவாக்க ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகளை ஒழிக்க
ஆந்திர மாநிலத்தை உலுக்கி வரும் மாவோயிஸ்டுகள் மற்றும் பெருகி வரும் தீவிரவாத செயல்களை ஒடுக்கவே இந்தப் படையை உருவாக்கியது ஆந்திர அரசு.
1600 வீரர்கள்
இந்த ஆக்டோபஸ் படையில் கிட்டத்தட்ட 1600 வீரர்கள் உள்ளனர். அனைவரும் அதிரடிப் படையினர் ஆவார். கமாண்டோப் பயிற்சி பெற்றவர்கள் இவர்கள்.
சிறப்புப் பிரிவு போலீஸார்
ஆந்திர மாநில காவல் படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களே இந்த ஆக்டோபஸ் படையில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு அதி நவீன துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது, தானியங்கித் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கடுமையான பயிற்சிகள் தரப்படுகின்றன.
தனித் தனி பணி
இந்த வீரர்களுக்கு் தனித் தனியாக பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது கோவில்களின் பாதுகாப்பு மற்றும் அசம்பாவித செயல்களைக் கவனிக்க ஒரு பிரிவு உள்ளது. மாவோயிஸ்டுகளைக் கவனிக்க ஒரு பிரிவு உள்ளது. தீவிரவாத செயல்களை முறியடிக்க, தீவிரவாதிகளைப் பிடிக்க தனிப் பிரிவு உள்ளது.
வெளிநாட்டு ஆயுதங்கள்
ஆக்டோபஸ் வீரர்களுக்காகவே பிரத்யேகமாக வெளிநாடுகளிலிருந்து துப்பாக்கி உள்ளிட்டவற்றை வரவழைத்துக் கொடுத்துள்ளனர். இவர்களது தலைமையகம், ஹைதராபாத்தின் பேகம்பேட்டை பகுதியில் உள்ளது.
மீட்புப் பணிகளில் திறமையானவர்கள்
இந்தப் படைப் பிரிவினருக்கு வீடு புகுந்து மீட்பது, பிணைக் கைதிகளைப் பிடித்திருக்கும் தீவிரவாதிகள் உள்ளிட்டோரை மிகத் திறமையாக பிடிப்பது உள்ளிட்டவற்றில் தனிப் பயிற்சி தரப்பட்டுள்ளது.
இப்ராகிம்பட்டிணத்தில் கமாண்டோ பயிற்சி மையம்
ஹைதராபாத் அருகே இப்ராகிம்பட்டிணம் என்ற இடத்தில் இந்தப் படையின் கமாண்டோப் பிரிவினருக்கான சிறப்புப் பயிற்சி முகாமும் உள்ளது.
இத்தகைய நவீனமான படைப் பிரிவினரின் உதவியுடன்தான் நேற்று இஸ்மாயிலையும், பிலால் மாலிக்கையும் தமிழக போலீஸார் மடக்கிப் பிடித்துக் கொண்டு வந்துள்ளனர்.