சொல்லியடித்த பாஜக... ஜனாதிபதி தேர்தலில் உறுதியான திரௌபதி முர்முவின் வெற்றி - ஒடிசா முதல்வர் வாழ்த்து
புவனேஷ்வர்: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள திரௌபதி முர்முவுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.

பாஜக வேட்பாளர்
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் பாஜக முழு மூச்சாக இறங்கியது. கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளிடம் இதுகுறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், கேரள ஆளுநர் ஆரிப் முஹம்மது கான், தெலுங்கானா புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பெயர்களும் அடிப்பட்டன.

திரௌபதி முர்மு
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக 64 வயதான திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். இவர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெறுவார்.

ஒடிசா முதலமைச்சர் வாழ்த்து
இதுகுறித்து ட்விட்டரில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துக்கள். பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து என்னிடம் விவாதித்தபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். ஒடிசா மக்களுக்கு இது உண்மையாகவே பெருமையான தருணம். முர்மு இந்திய மகளிர் அதிகாரம் பெறுவதற்கு சிறந்த முன்மாதிரியாக இருப்பார் என்று உறுதியாக சொல்கிறேன்." என்று குறிப்பிட்டு மறைமுகமாக தனது ஆதரவை பதிவு செய்து உள்ளார்.

ஏன் திரௌபதி முர்மு?
2017 குடியரசுத் தலைவர் தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவுக்கு இருக்கும் வாக்குகளின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. எனவே அக்கட்சி தன்னுடன் கூட்டணியில் உள்ள அதிமுக, எதிர்க்கட்சி கூட்டணியில் இல்லாத பாஜக மீதும் விமர்சனங்களை வைக்காத ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் பீகாரை ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் நம்பி இருக்கிறது. எனவேதான் பிஜு ஜனதா தளத்தின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஒடிசாவை சேர்ந்த பழங்குடி பெண்ணான திரௌபதி முர்முவை பாஜகவின் நிறுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications