நதி நீர் பிரச்சனை: தமிழக விவசாயிகளைப் போலவே டெல்லிக்கு படையெடுத்த ஒடிஷா விவசாயிகள்!
தமிழக விவசாயிகள் பாணியில் மகாநதி விவகாரத்தில் டெல்லியில் ஒடிஷா விவசாயிகளும் போராடி வருகின்றனர்.
டெல்லி: நதிநீர் பிரச்சனைக்க் தீர்வு காண கோரி தமிழக விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராடுவதைப் போல தற்போது ஒடிஷா விவசாயிகளும் களமிறங்கியுள்ளனர். மகாநதியின் குறுக்கே அணை கட்டுவதை சத்தீஸ்கர் கைவிட வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் ஒடிஷா விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனையை தீர்க்க தீராணியற்றதாக இருக்கிறது டெல்லி அரசு. காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு ஓரவஞ்சனையாக துரோகம் செய்து மேலாண்மை வாரியமே அமைக்க முடியாது என முதுகில் குத்தியது டெல்லி.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா
பாலாற்றின் குறுக்கே வரிசையாக அணை கட்டுகிறது ஆந்திரா; காவிரியின் குறுக்கே அணை கட்டுகிறது கர்நாடகா; பவானியை கபளீகரம் செய்கிறது கேரளா; ஆனால் கண்டுகொள்ளாத அரசாக இருக்கிறது டெல்லி.
டெல்லியில் போராட்டம்
இதனால் செத்து மடியும் தமிழக விவசாயிகள் நீதி கேட்டு டெல்லியின் கதவுகளை கொட்டும் மழையிலும் வெயிலும் தட்டி போராடி வருகின்றனர். இந்த விவசாயிகளை கொச்சைப்படுத்துகிற கும்பலும் தமிழகத்தில் நடமாடுகின்றன.
ஒடிஷா விவசாயிகளும்
தற்போது தமிழக விவசாயிகள் பாணியை பின்பற்றி ஒடிஷா விவசாயிகளும் டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். மகாநதி ஆற்றின் குறுக்கே சத்தீஸ்கர் மாநில அரசு 31 நதிநீர் திட்டங்களை செயல்படுத்த ஒடிஷா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஆக.12 வரை போராட்டம்
இத்திட்டங்களை கைவிட வலியுறுத்தி 174 ஒடிஷா விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் முகாமிட்டு போராடி வருகின்றனர். ஒடிஷா விவசாயிகளின் போராட்டம் ஆகஸ்ட் 12-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.