ஒடிஷா அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு!
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் அமைச்சர் ஒருவர் மீது அடையாளம் தெரியாத கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து பைக்கில் பூரியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பூரி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சருமாக இருப்பவர் மகேஸ்வர் மொஹந்தி. நேற்றிரவு அவர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த இருவர் அவர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
இதனால் அவருக்கு இடது கை மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக, புவனேஸ்வரில் இருக்கும் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குண்டு அகற்றப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க டிஜிபி பிரகாஷ் மிஸ்ரா சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளளார். பூரி விரைந்துள்ள அக்குழு முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை விரைவில் கண்டறிந்து கைது செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.