ஒடிஷாவில் மனைவி உடலை சுமந்து சென்ற கணவர்.. ஷாக் ஆன பஹ்ரைன் பிரதமர்.. நிதியுதவி!
புவனேஸ்வர்: ஒடிஷாவில் மருத்துவமனையில் உயிரிழந்த தன் மனைவியின் உடலை 10 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஏழை மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார்.
ஒடிசா மாநிலம் காலாகேண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின நபர் தானா மாஜ்கி என்பவரின் மனைவி அனாங், காசநோய் காரணமாக, கடந்த 23ம் தேதி பவானிபட்னா மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனைவியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்குவதற்கு மருத்துவமனை அதிகாரிகள் மறுத்து விட்டதால், தானா மாஜ்கி தனது மனைவியின் உடலை போர்வையில் சுற்றி தனது தோளில் சுமந்து சென்றார். 10 கி.மீ. தூரம் அவர் சுமந்து சென்ற சம்பவம், சமூக வலைதளங்களில் புகைப்படமாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்செய்தியை கேள்விப்பட்ட பஹ்ரைன் பிரதமர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா மனம் வருந்தி உள்ளார். பின் தானா மாஜ்கிக்கு நிதி உதவி செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது. அந்நாட்டு பிரதமர் அலுவலகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர் தானா மாஜ்கியை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைனின் பிரதமர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஹ்ரைனின் பிரதமரும் அந்நாட்டின் இளவரசருமான மாண்புமிகு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா இந்திய தூதரகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார். பதில் கிடைத்தவுடன் அந்த ஏழை மனிதருக்கு கடல் கடந்து மனிதநேய உதவி கிடைக்கும்.