ஹெல்மெட் இல்லாத புது வண்டிகளுக்கு பூஜை கிடையாது.. ஒடிசாவில் கோயில் நிர்வாகம் சூப்பர் பிளான்
ஒடிசா மாநிலத்தில் கோவில் ஒன்றில் சாலை விபத்துகளை தடுக்க புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஜெகத்சிங்பூர் : ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெகத்சிங்பூரில் ஹெல்மெட் இல்லாமல் வந்தால் புது வண்டிகளுக்கு பூஜை செய்ய முடியாது என்று கனக்பூர் மா சரளா ஆலய நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
ஒடிசா மாநிலத்தின் ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள கனக்பூர் என்கிற கிராமத்தில்பிரசித்தி பெற்ற மா சரளா ஆலயம் அமைந்து உள்ளது. அந்த கோவில் நிர்வாகம் சாலை விபத்துகளை தவிர்க்க புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அந்த திட்டம் அப்பகுதியில் நல்ல வரவேற்பை பெற்றும் உள்ளது.
கடந்த வாரம் கோவில் நிர்வாகத்திற்கும், மாவட்ட போலீஸாருக்கும் நடந்த கூட்டம் ஒன்றில் புதிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கி, கோவிலுக்கு பூஜைக்கு கொண்டு வருவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் அப்போது தான் பூஜை செய்யப்படும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஹெல்மெட் இல்லாமல் வருவோருக்கு பூஜை செய்யப்படமாட்டாது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகி சுதம் சரண் பாண்டா கூறுகையில், தினமும் இந்த கோவிலுக்கு சராசரியாக 10 புது வண்டிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது.
விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. எங்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், இரு சக்கர வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் பல கோவில்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.