ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத் வந்த ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி
ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
காந்தி நகர்: ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஏற்கனவே ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில் இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாறுபாடு இதுவரை 40 நாடுகளுக்குப் பரவியிருப்பதாகவும், மற்ற நாடுகளைப் பாதிக்கும் எல்லா சாத்தியக்கூறுகளும் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
கொரோனா வைரசின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் குறித்த செய்தி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பயணிகளில் 66 வயது முதியவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 20ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அவர் 7 நாட்களுக்கு பின்னர் துபாய் சென்றுள்ளார்.
இந்த நிலையில் ரிஸ்க் நாடுகள் எனக் கூறப்படும் தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு 45 நிமிடங்களில் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. முடிவுகள் நெகட்டிவ் வந்தால் மட்டுமே அவர்கள் மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனிடையே குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் ஜிம்பாப்வேயில் இருந்து திரும்பிய ஜாம்நகரைச் சேர்ந்த 72 வயது முதியவருக்கு நேற்று கோவிட்-19 இருப்பது உறுதியானது. அவருக்கு ஓமிக்ரான் மாறுபாடு சோதனை செய்யப்பட்டதில் ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அந்த நபர் தற்போது அரசு நடத்தும் ஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாம்நகர் நகராட்சி ஆணையர் விஜய் காரடி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த வாரம் ஜிம்பாப்வேயில் இருந்து ஜாம்நகர் திரும்பியுள்ளனர். மற்ற 2 பேரின் சோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது. மாறுபாட்டை சரிபார்க்க மரபணு வரிசைமுறைக்கான மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. சமீபத்தில், ஜாம்நகர் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு கோவிட் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.