விமான விபத்து விசாரணையில் ஒரு மைல்கல்: பெங்களூரில் அதிநவீன நச்சுவியல் ஆய்வகம்
பெங்களூர்: விமான விபத்து விசாரணைக்கு உதவியாக இருக்கும் வகையில் பெங்களூரில் இந்தியாவின் முதல் விமான நச்சுவியல் ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது.
விமான நச்சுவியல் ஆய்வகம் பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் இந்திய விமானப்படையின் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் மெடிசின் வளாகத்தில் அமைந்துள்ளது. விமான விபத்து விசாரணைக்கு தேவைப்படும் 20 வகை மருந்துகளை அந்த ஆய்வகம் ஏற்கனவே தயாரித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு மங்களூரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் விமானம் விபத்துக்குள்ளாகி 158 பேர் பலியானபோது தான் இந்த ஆய்வகம் துவங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ஏரோஸ்பேஸ் மெடிசினில் எம்.டி. பட்டம் பெற்றுள்ள ஏர் கமாண்டர் தீபக் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
விமான விபத்து விசாரணையில் உதவியாக இருக்கவே இந்த ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது. விமான நச்சுவியல் துறையில் பல ஆய்வுகள் நடத்தி விமான பாதுகாப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வகை ஆய்வுகள் சர்வதேச அளவில் பல நாடுகளில் நடத்தப்படுகிறது.
ஆய்வகத்தில் பல அதிநவீன கருவிகள் உள்ளன என்றார்.
கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த ஆய்வகம் துவங்குவது பற்றி இந்திய விமானப்படை அறிவித்தது. ஆனால் அதன் பிறகு ஆய்வக பணிகள் பற்றி வெளியே தெரிவிக்காமல் வைத்திருந்தனர். இந்த ஆய்வகத்தில் எந்த வகை விபத்துகள் குறித்து இதுவரை ஆய்வு நடந்துள்ளது என்பதை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் குவாலியர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் சி-130ஜே சுப்பர் ஹெர்குலிஸ் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். அந்த விபத்து குறித்து பெங்களூர் ஆய்வகத்தில் தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள விமான நச்சுவியல் ஆய்வகத்தையும் சேர்த்து உலகில் இந்த வகை ஆய்வகங்கள் மொத்தம் நான்கு உள்ளன.