சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை: 2 வாரத்தில் 4 லட்சம் பக்தர்கள் ஆல்லைனில் முன்பதிவு
சபரிமலை: புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜை தரிசனத்திற்கு ஆன்லைனில் இரு வாரங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 17ம் தேதி முதல் சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடங்கும். டிசம்பர் 27ம் தேதி விழாவின் உச்ச நிகழ்வான, மண்டல பூஜை நடைபெறும்.
மண்டல பூஜை தரிசனத்திற்கு ஆன்லைனில் கடந்த 2 வாரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தமிழக பக்தர்கள் தான் அதிக அளவில் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த வருடம் மொத்தம் 14 லட்சம் பக்தர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி தரிசனம் செய்தனர். இவ்வருடம் இது 17 லட்சமாக உயரும் என கருதப்படுகிறது.
எனவே சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மண்டல கால பூஜைக்கு நடை திறக்கப்படும்போது பம்பையில் 1000 போலீசாரும், சன்னிதானத்தில் 2,000 போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பக்தர்கள் துணி வீசுவதைக் கண்காணிக்க பம்பை ஆற்றின் அருகே கூடுதல் போலீசார் நிறுத்தப்படுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெகுதொலைவிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக கடந்த 4 வருடங்களுக்கு முன் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.