ஜார்கண்ட் தேர்தல்... மோடிக்கு காத்திருக்கும் பெரிய சோதனை!
ராஞ்சி: ஜார்கண்ட் தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு பெரிய சோதனை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இன்று ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல் இன்று தொடங்கி 5 கட்டங்களாக நடக்கவிருக்கிறது.
இந்தத் தேர்தல் குறித்து பிரபல தேர்தல் ஆய்வாளர் டாக்டர் சந்தீப் சாஸ்திரி ஒன்இந்தியாவுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஆளும் ஜனதா முக்தி மோர்ச்சா கட்சிக்கு இந்தத் தேர்தல் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்கிறார் சாஸ்திரி. காரணம்?
"ஜனதா முக்தி மோர்ச்சாவின் மோசமான அரசு நிர்வாகம். இந்தக் கட்சி வேண்டாம்... எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறும் நிலையில் காங்கிரஸும் இல்லை. காரணம் காங்கிரசும் ஜனதா முக்தி மோர்ச்சாவும் கடந்த கால கூட்டாளிகளே.
காங்கிரஸைப் பொறுத்தவரை, அந்தக் கட்சி இன்னும் தனது நாடாளுமன்ற தோல்விகளிலிருந்தே மீளவில்லை. மாநிலத் தேர்தல்களில் அதிகாரத்தை இழந்து வருவதோடு, மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டு வருகிறது.
இன்னும் மோடி அலை..
ஜார்க்கண்டில் மோடியின் அலை இன்னும் வீசுகிறது. பாஜகவின் தேர்தல் பிரச்சார அணுகுமுறை வித்தியாசமாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
லாலு பிரசாத் யாதவும் நிதீஷ் குமாரும் கூட்டாக பிரச்சாரம் செய்தாலும் , பாஜகவுக்கு பாதிப்பில்லை என்பதுதான் உண்மை.
ஆனாலும் ஜார்க்கண்ட் தேர்தல் என்பது பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் பெரிய பரீட்சைதான். ஹரியாணாவிலும், மகாராஷ்ட்ராவிலும் கோரியது போல தங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என ஜார்க்கண்ட் வாக்காளர்களிடம் கோர முடியாது. காரணம் அங்கே இப்போதுதான் முதல் முறை அதிகாரத்துக்கு வருகிறது பாஜக.
ஆனால் ஜார்க்கண்டில் ஏற்கெனவே ஆட்சியிலிருந்த கட்சிதான் பாஜக. மக்களுக்கு இவர்களை முன்பே தெரியும். இப்போதைய மக்களிடம் மோடியின் தலைமையைக் காட்டித்தான் பிரச்சாரம் செய்கிறார்கள். தோற்றால் மோடிக்குதான் பெரிய இழுக்காகிவிடும்.
ஆனால் அப்படி நடக்கும் என்று தோன்றவில்லை. காங்கிரஸை இங்கேயும் மூன்றாம் இடத்துக்குத் தள்ள நல்ல வாய்ப்பு உள்ளதென்றே நம்புகிறேன்," என்கிறார் சந்தீப் சாஸ்திரி.