குஜராத் ஆளுநரை மிசோராமுக்கு மாற்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
டெல்லி: குஜராத் ஆளுநர் கமலா பெனிவால் மிசோராமுக்கு மாற்றப்பட்டுள்ளதை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளபோதிலும், பாஜக அதை சமர்த்தனை செய்துகொண்டுள்ளது.
குஜராத் முதல்வராக தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி செய்தபோது, அம்மாநில ஆளுநராக பதவி வகிக்கும் கமலா பெனிவாலுக்கும், மோடிக்கும் நடுவே சுமுக உறவு இல்லை. லோக்ஆயுக்தா நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் இருவரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை இருந்தது. இந்நிலையில், கமலாபெனிவால் மிசோராம் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ள உத்தரவு நேற்று வெளியானது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனிஷ்திவாரி, "அரசின் நடவடிக்கை எதற்காக என்பதை கண்டுபிடிக்க கஷ்டம் தேவையில்லை. இது ஒன்றும் இது ராக்கெட் அறிவியல் கிடையாது. அரசின் நோக்கத்தை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அரசியல் பழிவாங்கும் போக்குதான் இந்த நடவடிக்கைக்கு காரணம்.
ஆளுநர் பதவியை அரசியல் காரணங்களுக்காக பந்தாடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றார். சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரான நரேஷ் அகர்வாலும், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த பணிமாற்றத்தை பெரிய விஷயமாக எடுக்க தேவையில்லை என்று பாஜக கூறுகிறது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், "அரசியலில் குற்றம் சாட்டுவது வழக்கமான ஒன்றுதான். அதேப்போலத்தான், ஆளுநர் மாற்றும் அரசின் செயல்பாடுகளில் ஒன்றுதான். ஒவ்வொரு ஆளுநர் நியமனத்துக்கும் அரசியல் காரணங்களை தேட வேண்டாம்" என்றார்.