இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை
டெல்லி: இந்தியாவில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அதில் உலகம் முழுவதும் 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள் சுமார் 5 கோடியே 80 லட்சம் பேர் பள்ளியில் சேர்க்கப்படாமல் உள்ளதாகவும், இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தலா 10 லட்சத்திற்கும் மேலான குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
14 லட்சம் குழந்தைகள்
கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 10 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்தநிலை
அதே சமயம் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்க முன்வந்த இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, நேபாளம், ருவாண்டா, யேமன், பருன்டி, கானா, ஈரான் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்த நிலையில், சமீபகாலமாக கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி குறைந்துவருவதாகவும், பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையில் மந்தநிலை காணப்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
லட்சியத்தை எட்டுவது சிரமம்
இது குறித்து கருத்து கூறியுள்ள யுனெஸ்கோவின் அமைப்பின் இயக்குனர் இரினா பொகாவா, இதே ரீதியில் சென்றால் ' 2015 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய அளவில் தொடக்க கல்வி அறிவு' என்ற லட்சியத்தை எட்ட முடியாது என அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் 13 லட்சம்
பாகிஸ்தானில் மட்டும் கடந்த 2012 ஆம் ஆண்டில் 54 லட்சம் குழந்தைகள் பள்ளி படிப்பை கைவிட்ட நிலையில், இந்தோனேஷியாவில் இந்த எண்ணிக்கை 13 லட்சமாக உள்ளது.
25 சதவிகித குழந்தைகள்
கடந்த 2000 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, உலகளாவிய அளவில் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 25 சதவீதத்தினர் இந்தியா, நேபாளம், ருவாண்டா, ஏமன், பருன்டி, கானா, ஈரான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ளதாக தெரியவந்தது.
4 மில்லியனாக குறைவு
இந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் 86 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது மேற்கூறிய நாடுகளில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த குழந்தைகளின் எண்ணிக்கை 27 மில்லியனிலிருந்து 4 மில்லியனுக்கும் கீழ் குறைந்துள்ளது.
ஆரம்ப கல்வி அஸ்தமனம்
இந்நிலையில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், இதே நிலை நீடித்தால் உலக அளவில் சுமார் 15 மில்லியன் சிறுமிகளுக்கும், 10 மில்லியன் சிறுவர்களுக்கும் ஆரம்ப கல்வி கிடைக்காமலேயே போய்விடும் என்று யுனெஸ்கோ அச்சம் தெரிவித்துள்ளது.
நம்பிக்கை கீற்று
எனினும் உலகநாடுகள் பல அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தை முனைப்புடன் முன்னெடுத்து செல்வதால், ஆரம்ப கல்வி பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைவதற்கான ஆக்கப்பூர்வமான அறிகுறிகள் தெரிவதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.