குஜராத் மதக்கலவரம்.. 1000 கொலைகள்! குற்றவாளிகள் விடுதலை - அமித்ஷா கற்றுத்தந்த பாடம் இதுவா? ஒவைசி
காந்திநகர்: பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்து அவரது 3 வயது தங்கையை கொலை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்ததே 2002 கலவரத்தின் மூலம் அமித்ஷா கற்றுத் தந்த பாடம் என ஐதராபாத் எம்பி அசதுத்தீன் ஒவைசி பேசி உள்ளார்.
குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதன் தலைவரும் ஐதராபாத் எம்பியுமான அசதுத்தீன் ஒவைசி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஜுஹபுராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "2002 குஜராத் கலவரக்காரர்களுக்கு அவர்கள் பாடம் புகட்டிவிட்டதாகவும், பாஜக குஜராத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்திவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.
பில்கிஸ் வீடு முன் “பட்டாசு” கடை.. உரிமையாளரும் குற்றவாளி! குஜராத்தில் “ஃப்ரீயாக” சுற்றும் 11 பேர்
பில்கிஸ் பானு
இந்த அகமதாபாத் தொகுதியின் எம்பி அமித்ஷாவிடம் நான் ஒரு விசயத்தை சொல்ல விரும்புகிறேன். 2002 ஆம் ஆண்டில் நீங்கள் சொல்லிக்கொடுத்த பாடம் என்னவென்றால், பில்கிஸ் பலாத்கார குற்றவாளிகள் உங்களால் விடுவிக்கப்பட்டார்கள். பில்கிஸின் 3 வயது சகோதரரியை கொன்றவர்களை விடுதலை செய்தீர்கள். அஹ்சன் ஜாஃப்ரி கொல்லப்படலாம் என்பதை நீங்கள் கற்றுக் கொடுத்தீர்கள்.
2002 மதக்கலவரம்
குல்பார்க் கூட்டுறவு அங்காடி படுகொலைகள், பெஸ்ட் பேக்கரி எரிப்பு என 2002 மதக்கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். நீங்கள் கற்றுக்கொடுத்த எத்தனை பாடத்தைதான் நாங்கள் நினைவில் வைத்திருப்பது அமித்ஷா. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், பாடம் கற்பிப்பது பெரிய விசயமல்ல. அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கினால்தான் அமைதி வலுப்படும்.
அதிகார போதை
ஒருவரிடம் அதிகாரம் எப்போதும் நிலைத்து இருக்காது. எல்லோரிடம் அதிகாரம் ஒருநாள் பறிக்கப்படும். உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகார போதையில் எல்லோருக்கும் தான் பாடம் கற்பித்ததாக கூறுகிறார். என்ன பாடத்தை நீங்கள் கற்பித்தீர்கள்? நாடு முழுவதும் பேசப்பட்டீர்கள். டெல்லியில் மத கலவரம் நடைபெற்ற சமயத்தில் நீங்கள் எந்த பாடத்தை கற்பித்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பாஜக பிரச்சாரம்
குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, ஆளும் பாஜக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் வியாழன் அன்று உரையாற்றியபோது, "2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்துக்கு காரணமானவர்களுக்கு பாடம் புகட்டியதால் 22 ஆண்டுகளாக குஜராத் அமைதியாக உள்ளது." என்றார்.
அமித்ஷா பேச்சு
"கடந்த 1995 ஆம் ஆண்டுக்கு முன் குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மதக்கலவரம் அதிகளவில் ஏற்பட்டு வந்தது. காங்கிரஸ் பல்வேறு சாதிகள், மதங்களுக்கும் இடையே மோதலை தூண்டி வந்தது. இந்த கலவரங்களின் மூலமாக காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை வலுப்படுத்தியது. சமூகத்தின் பெரிய பிரிவினருக்கு இதன் மூலம் அநீதியை இழைத்து வந்தது.
காங்கிரஸ் மீது விமர்சனம்
பருச் பகுதியில் ஏராளமான கலவரங்கள், வன்முறைகள் நடைபெற்று ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த குழப்பங்களின் காரணமாக குஜராத்தின் வளர்ச்சிக்கு இடமின்றி இருந்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு மதக்கலவரத்தை தூண்ட முயன்றார்கள். நாங்கள் பாடம் புகட்டினோம். அவர்களை சிறையில் அடைத்தோம். கடந்த 22 ஆண்டுகளில் ஒருமுறை கூட ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. பாஜக குஜராத்தில் அமைதியை ஏற்படுத்தியது." என்றார்.