பாலியல் வழக்கில் சிக்கிய 'தெரி' முன்னாள் தலைவர் பச்சோரிக்கு ஜாமீன்.. வெளிநாடு செல்ல அனுமதி
டெல்லி: பாலியல் வழக்கில் சிக்கிய, தெரி அமைப்பின் முன்னாள் தலைவர் பச்சோரிக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியதோடு, அவர் வெளிநாடு செல்லவும் அனுமதித்துள்ளது.
டெல்லியில் ‘தெரி' என்னும் எரிசக்தி, வளங்கள் நிறுவனத்தின் செயல் துணைத்தலைவர், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர், தெரி பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிகளை வகித்து வந்தவர் ராஜேந்திர குமார் பச்சோரி (75).
இவர் மீது உடன் பணியாற்றிய பெண் உட்பட சில பெண்கள் பாலியல் புகார்களை கூறி உள்ள நிலையில் இந்நிலையில் டெல்லி மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் ஷிவானி சவுகான், பச்சோரியின் ஜாமீன் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
ஜூலை 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதிவரை பச்சோரி விரும்பியபடி மெக்சிகோ மற்றும் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளலாம். பிணையமாக ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஏற்கனவே இவர் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட காலகட்டங்களில், கோர்ட்டின் நிபந்தனைகளை மதித்து நடந்து கொண்டார் என்பதால் மீண்டும் அனுமதி வழங்குவதில் சிக்கல் இல்லை எனவும் கோர்ட் கூறியுள்ளது.