அரசாங்கமே எங்கள் கைகளை கட்டி.. மிருகங்களிடம் வீசிவிட்டது! பாகிஸ்தான் போலீஸார் கண்ணீர்.. என்ன நடந்தது
தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் முன்களத்தில் இருந்து சண்டையிட்டு வருவது நாங்கள்தான். ஆனால், எங்களை பாதுகாக்க அரசாங்கம் தயாராக இல்லை.
இஸ்லாமாபாத்: அரசாங்கமே எங்கள் கைகளை கட்டி மிருகங்களிடம் தூக்கி வீசுகிறது என்று பாகிஸ்தான் போலீஸார் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் மசூதியில் நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலில் காயமடைந்த போலீஸார் பலர் இவ்வாறு தெரிவித்து வருகின்றனர்.
தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்றும், பாகிஸ்தான் அரசு தங்களை கைவிட்டுவிட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பழிக்கு பழி வாங்கிட்டோம்.. பாகிஸ்தான் பெஷாவர் மசூதி தாக்குதலுக்கு காரணம் சொன்ன தெஹ்ரிக்-இ-தாலிபான்
வெறியாட்டம் ஆடிய தீவிரவாதிகள்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் கடந்த 31-ம் தேதி தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களும், சில போலீஸாரும் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிஹ் - இ - தலிபான் எனும் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கூட்டாளியான இந்த தெஹ்ரிக் - இ - தலிபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்தியா மீது வன்மம்
இது ஒருபுறம் இருக்க, தங்கள் நாட்டில் தீவிரவாதிகளின் அராஜகம் அதிகரிப்பதை உணர்ந்த போதிலும், இந்தியா மீது வன்மத்தை கக்குவதை பாகிஸ்தான் இன்னும் கைவிடவில்லை. இந்த தாக்குதல் குறித்து நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், "கடவுளை வழிபடுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் கொடுமை, இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூட நடைபெறாது" என பேசினார். அதாவது, பாகிஸ்தானை விட இந்தியா, தீவிரவாதிகளால் நிறைந்திருக்கிறது என்ற தொனி அவரது பேச்சில் வெளிப்பட்டது. இதற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
"பாக். அரசாங்கம் கைவிட்டுவிட்டது"
இந்நிலையில், இந்த மசூதி குண்வெடிப்பில் காயம் அடைந்த போலீஸார் தங்கள் மனவேதனையை கொட்டித் தீர்த்து வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் தனது கையை இழந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், "குண்டுவெடிப்பு அதிர்ச்சியில் இருந்து எங்களால் இன்னும் மீள முடியவில்லை. ஒவ்வொரு நாளும் எங்களுடன் பணிபுரிபவர்கள் தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து புறப்படும் போது, திரும்பி வருவோமா என்ற நிலையில்தான் பணிபுரிந்து வருகிறோம். பாகிஸ்தான் அரசாங்கம் எங்களை கைவிட்டுவிட்டதாக நினைக்க தோன்றுகிறது" எனறார்
"மிருகங்களிடம் வீசிவிட்டன"
மற்றொரு காவல்துறை அதிகாரி கூறுகையில், "தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் முன்களத்தில் இருந்து சண்டையிட்டு வருவது நாங்கள்தான். பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், பொது இடங்களை தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாத்து வருகிறோம். ஆனால், எங்களை பாதுகாக்க அரசாங்கம் தயாராக இல்லை. தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட முழு சுதந்திரத்தை பாகிஸ்தான் அரசு வழங்க மறுக்கிறது. பாகிஸ்தான் அரசாங்கமே எங்களின் கைகளை கட்டி மிருகங்களுக்கு இரையாக எங்களை தூக்கி வீசி வருகின்றன. பாதுகாப்பு வழங்குபவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத போது, நாட்டை பாதுகாப்பது யார்?" என அவர் கண்ணீர்மல்க கேள்வியெழுப்பினார்.