அடி வாங்கியும் மீண்டும் எல்லையில் வாலாட்டிய பாகிஸ்தான்: தீபாவளி வரை இதே அக்கப்போர் தானாம்
டெல்லி: பாகிஸ்தான் தீபாவளி பண்டிகை வரை இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுமார் 9 நாட்கள் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வந்தது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவில் இருந்து வெள்ளிக்கிழமை முழுவதும் பாகிஸ்தான் அத்துமீறாமல் இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் 12 இடங்களில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதையடுத்து இந்திய ராணுவமும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூடுகளில் இதுவரை 8 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 12 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 52 பேர் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் பக்கத்தில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 85 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு தீபாவளி பண்டிகை வரை தொடரும் என்றும், அண்மை காலமாக ஆண்டுதோறும் ஈத் துவங்கி தீபாவளி வரை துப்பாக்கிச்சூடு தொடர்வது வழக்கமாகிவிட்டது என்றும் ராணுவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லெப்டினென்ட் ஜெனரல் கே.ஹெச். சிங் கூறுகையில்,
காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அளவில் பெரிதாக்க முயன்று பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. மேலும் பாகிஸ்தானால் நம் நாட்டுக்குள் தீவிரவாதிகளை ஊடுறுவச் செய்ய முடியவில்லை. அதற்கு தான் எல்லையில் நம் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதற்கு நாம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம் என்றார்.