தீவிரவாதிகள் வெறியாட்டம் ஆடிய பாரீஸில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்- சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: பாரீஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் இந்தியர்கள் யாரும் பலியாகவில்லை என்றும், அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 129 பேர் பலியாகியுள்ளனர், 352 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஈவு, இரக்கமற்ற இந்த தாக்குதல்களுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து இந்திய தூதரகத்தின் துணை தலைவர் மனிஷ் பிரபாத் கூறுகையில்,
தீவிரவாத தாக்குதல்களில் இந்தியர்கள் பலியானதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. தாக்குதல் குறித்த விபரங்களை அறிய ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளோம். இரவு முழுவதும் எங்களுக்கு போன் அழைப்புகள் வந்தன.
I have spoken to Indian Ambassador in France. He has informed me that all Indians are safe. France has advised citizens to stay indoors.
— Sushma Swaraj (@SushmaSwaraj) November 14, 2015
சமூக வலைதளம் உள்பட பலவழியாக இங்கு உள்ள இந்திய சமூகத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம் என்றார்.
இந்நிலையில் இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பிரான்ஸில் உள்ள இந்திய தூதரிடம் தொலைபேசி மூலம் பேசினேன். அனைத்து இந்தியர்களும் பத்திரமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மக்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.