ஏழு நாட்கள் முடங்கிய நாடாளுமன்றத்தால் எத்தனை கோடி வீண் தெரியுமா?
நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கப்பட்டதால் 7 நாட்களில் ரூ.22 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வருகின்றன.எனவே, கடந்த 7 நாட்களில் ரூ.22 கோடி வீணாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை 22 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தொடர் தொடங்கிய மறுநாள் முதல் ரூபாய் நோட்டு பிரச்சனையால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 7 நாட்களாக முடங்கியுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. இன்றைக்கும் ரூபாய் நோட்டு பிரச்சனையை கையில் எடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், முக்கிய மசோதாக்கள் நிறைவேறாமல் நாடாளுமன்ற செயல்பாடுகள் நடைபெறாமல் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது. நாடாளுமன்ற செயல்பாட்டுக்கு என ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மக்களவைக்கு ரூ.623 கோடியே 29 லட்சமும், மாநிலங்களவைக்கு ரூ.176 கோடியே 19 லட்சமும் ஒதுக்கப்பட்டது. வருடந்தோறும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதிகபட்சமாக 100 நாட்கள் கூடுகின்றன.
ஆனால், இடையில் வரும் விடுமுறை நாட்கள் தவிர்த்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சுமார் 70 நாட்கள் செயல்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒவவொரு கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சிகளின் அமலியால் வீணாகும் மக்களின் வரிப் பணத்தை உத்தேசமாக கணக்கிட முடியும்.
நடப்பு நிதிஆண்டில் இரு அவைகளும் செயல்பட 1 மணி நேரத்திற்கு சராசரியாக ரூ.35 லட்சம் செலவாகிறது.
இதன்படி, கடந்த 16-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரையிலான 7 நாட்களில் ரூ.22 கோடி வீணாகி இருப்பதாக கூறப்படுகிறது.