செயலை வைத்தே ஒருவரை எடை போட முடியும்; ஜாதியை வைத்து அல்ல- மோடிக்கு ராகுல் பதிலடி
அமேதி: ஒருவருடைய செயல்களை வைத்தும், அவருடைய சிந்தனைகளை வைத்தும் தான் அவர் என்ன மாதிரியானவர் என்பது நிர்ணயிக்கப்படுகிறது. அவரது ஜாதியை வைத்து அல்ல என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதிலடி தந்துள்ளார்.
தான் பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவன் என்பதாலேயே என்னை காங்கிரஸ் குறி வைத்துத் தாக்குகிறது என்று திடீரென ஜாதி ஆயுதத்தை கையில் எடுத்தார் நரேந்திர மோடி. உத்தரப் பிரதேசத்தின் பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளை மனதில் வைத்தே அவர் அவ்வாறு பேசியதாகக் கருதப்படுகிறது.
இதற்கு அமேதி தொகுதியில் பதில் தந்தார் ராகுல். அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல், திடீரென ஜாதியை ஆயுதமாக கையில் எடுத்துள்ளார் நரேந்திர மோடி.
ஒருவருடைய செயல்களை வைத்தும், அவருடைய சிந்தனைகளை வைத்தும் தான் அவர் என்ன மாதிரியானவர் என்பது நிர்ணயிக்கப்படுகிறது. அவரது ஜாதியை வைத்து அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா, மிர்சாபூர் ஆகிய நகரங்களில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்,
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை தேடி மகாராஷ்டிரத்துக்கு செல்லும்போது அவர்களை சிவசேனை மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சிகளின் தொண்டர்கள் தாக்குகின்றனர். உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரைச் சேர்ந்த மக்களுக்கு அதிகாரமளிப்பது குறித்துப் பேசும் நரேந்திர மோடி, இந்த மாநில மக்களை அச்சுறுத்தும் இந்தக் கட்சிகளுடன் கைகோத்துள்ளார். இதன்மூலம் மோடியின் இரட்டை முகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
கர்நாடகம், அஸ்ஸாம், ஹரியாணா, மகாராஷ்டிரம் என்று எங்கெல்லாம் காங்கிரஸ் அரசுகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் உங்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாததால் இங்குள்ள இளைஞர்கள் மும்பைக்கு பிழைப்பு தேடிச் செல்கின்றனர்.
தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக அவர்கள் (பாஜக) கலவரங்களைத் தூண்டி விடுகின்றனர். மக்களை தங்களுக்குள் மோதிக் கொள்ளச் செய்வார்களே தவிர, பிரச்சனைகள், வேலைவாய்ப்பு, மின்சாரம், நீர்ப்பாசனம் ஆகியவை குறித்து அவர்கள் பேசமாட்டார்கள்.
கர்நாடக மாநிலம் மங்களூரில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விடுதியில் புகுந்த பாஜகவின் ஆதரவு அமைப்பான ராம்சேனா அமைப்பு பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஒரு பக்கம் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியபடி, மறுபுறம் பெண்களுக்கு அதிகாரமளிப்பது குறித்து பிரசார சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள் பாஜகவினர். இதுவும் அவர்களது இரட்டை முகத்தையே காட்டுகிறது.
குஜராத்தில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் சீக்கியர்களை மோடி அரசு விரட்டி அடிக்கிறது. குஜராத்தில் ரூ.26,000 கோடி மதிப்பிலான மின்சாரமும், ரூ.45,000 கோடி மதிப்பிலான விவசாய நிலமும் தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
ஆனால், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.30,000 கோடியை காங்கிரஸ் வழங்கியிருக்கிறது. மத்தியில் மூன்றாவது முறையாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரம், மருத்துவ வசதி அளிக்கப்படும் என்றார் ராகுல் காந்தி.