சல்மான் கானின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
சல்மான் கானின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நடிகர் சல்மான்கான் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது சல்மான்கான் குடிபோதையில் இருந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது 2003-ம் ஆண்டு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
12 ஆண்டு வழக்கு
கடந்த 12 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி தேஷ்பாண்டே தீர்ப்பு கூறினார். விபத்து ஏற்படுத்தியதற்காக சல்மான்கானுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதற்காக 2 மாத ஜெயில் தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். காலை 11.15 மணிக்கு சல்மான்கான் குற்றவாளி என அறிவித்த நீதிபதி பகல் 1.25 மணிக்கு அவருக்கான தண்டனை விவரத்தை அறிவித்தார்.
கைதாகவில்லை
தீர்ப்பு கூறப்பட்டதும் சல்மான்கான் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு தீர்ப்பு நகல் 2 பக்கம் மட்டுமே வழங்கப்பட்டது. முழு தீர்ப்பு நகல் வழங்கினால்தான் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் அவர் கைது செய்யப்படவில்லை.
தீர்ப்பு நகலை வைத்தே ஜாமீன்
இதற்கிடையே சல்மான்கான் சார்பில் மூத்த வக்கீல் ஹரீஸ் சால்வே மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
அதில் தீர்ப்பு நகல் 2 பக்கமே வழங்கப்பட்டுள்ளது. எனவே சல்மான்கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று வக்கீல் கோரிக்கை விடுத்தார். அதற்கு அரசு வக்கீல் சந்தீப் ஷிண்டே எதிர்ப்பு தெரிவித்தார்.
2 நாள் ஜாமீன்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீப்சே வழக்கு விசாரணை முழுவதும் சல்மான்கான் ஜாமீனில் இருப்பதால் நாளை (8-ந் தேதி) வரை 2 நாட்களுக்கு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். இதனால் மாலை வரை கோர்ட்டிலேயே காத்து இருந்த சல்மான்கான் 2 நாள் இடைக்கால ஜாமீன் கிடைத்ததும் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
சிறப்பு மனு
உயர்நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு அவசரப்பட்டு வழங்கப்பட்ட ஒன்று என்று கூறி, தண்டனை விதிக்கப்பட்ட சல்மான்கானுக்கு வழங்கப்பட்ட 2 நாள் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இன்று உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்றே விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டால் அவர் மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்படுவார்.