கமிஷனை அதிகரிக்காவிட்டால்.... 'இனி பகலில் மட்டுமே பெட்ரோல் - டீசல் விற்பனை!'
டெல்லி: பெட்ரோல், டீசல் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கமிஷனை உயர்த்தாவிட்டால் மூன்று கட்டப் போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவி ஷிண்டே கூறுகையில், "1000 லிட்டர் பெட்ரோல் விற்பனைக்கு ரூ.2 ஆயிரத்து 570-ம், 1000 லிட்டர் டீசல் விற்பனைக்கு ரூ.1,620-ம் கமிஷன் பெற்று வருகிறோம்.
ஆனால் 1000 லிட்டர் பெட்ரோல் விற்றால் ரூ.3 ஆயிரத்து 333-ம், 1000 லிட்டர் டீசல் விற்றால் ரூ.2 ஆயிரத்து 126-ம் கமிஷன் வழங்க வேண்டும் என்று அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரை செய்து அறிக்கை அளித்துள்ளது.
இந்த சிபாரிசை ஏற்று, கமிஷன் தொகையை அதிகரித்து தர வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டு வருகிறோம்.
இதை நிறைவேற்றுவதாக எண்ணெய் நிறுவனங்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி கூறின. ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை. இதில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
கோரிக்கையை நிறைவேற்றித் தராவிட்டால், முதல் கட்டமாக மே மாதம் 10-ந் தேதியன்று பெட்ரோல், டீசலைக் கொள்முதல் செய்யாமல், 'கொள்முதல் இல்லா நாள்' கடைப்பிடிப்போம்.
அடுத்து மே மாதம் 14-ந் தேதி தொடங்கி ஞாயிறுதோறும் பெட்ரோல் நிலையங்களை இயக்க மாட்டோம்.
மே மாதம் 15-ந் தேதி முதல் பெட்ரோல் நிலையங்களை பகலில் மட்டுமே (காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை) இயக்குவோம்," என்றார்.