ஜார்க்கண்ட் மாநிலத்தில்.. டூவீலருக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 25 குறைப்பு!!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்,
சர்வதேச சந்தையில் கொரோனா பரவல் ஏற்பட்ட போது, கச்சா எண்ணெய் தேவை குறைந்து விலை பெருமளவு குறைந்தது. ஒரு கட்டத்தில் பூஜ்ஜியத்தைத் தாண்டியும் கூட கச்சா எண்ணெய் விலை குறைந்தது.
நீங்க போலி சாமியாரா? நிருபர்கள் கேட்ட கேள்வி.. அவசரமாக பாதியில் கிளம்பிய அன்னபூரணி.. என்ன நடந்தது?
ஆனால், கொரோனா வேக்சின் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படத் தொடங்கியதும், வைரஸ் பரவலை வேகமாகக் குறைந்து உலகம் மெல்ல இயல்வு நிலைக்குத் திரும்பியது.
ஒபெக் நாடுகள்
இவ்வளவு விரைவாக உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் கச்சா எண்ணெய் தேவை பல மடங்கு அதிகரித்தது. மேலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கவுள்ளதாக ஒபெக் நாடுகள் அறிவத்தன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மளமளவென அதிகரித்தது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையும் உயரத் தொடங்கியது.
பெட்ரோல் விலை குறைப்பு
இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்துக்கான செலவு அதிகரிப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை 25 ரூபாய் குறைத்து ஜார்கண்ட் அது அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதைப் புத்தாண்டு பரிசு என அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர்
டூவிலருக்கு ரூ 25 குறைப்பு
இது தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ட்விட்டரில், "பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாநிலத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் விலை 25 ரூபாய் குறைக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும்" எனப் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த நவ. மாதம் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் ரூ 100ஐ தாண்டியது. அதேபோல டீசல் விலையும் கூட சில மாநிலங்களில் ரூ100ஐ தொடத் தொடங்கியது. அந்த சமயத்தில் தீபாவளி பரிசாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் டீலர் விலை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கோரிக்கை
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்தார். அதேபோல பல்வேறு மாநில அரசுகளும் கூட பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தன. இதனிடையே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.