முகத்தில் சோகம்.. கண்களில் கண்ணீர்.. தாய் ஹீராபென்னின் உடலை தோளில் சுமந்து சென்ற பிரதமர் மோடி
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென் இன்று அதிகாலை இறந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி, தனது தாயார் ஹீரா பென்னுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு மிகவும் சோகமாக அவரது உடலை தோளில் சுமந்து சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென் குஜராத் மாநிலம் காந்திநகர் அருகே ரேசன் எனும் பகுதியில் வசித்து வந்தார். பிரதமர் மோடியின் தம்பியான பங்கஜ் மோடியுடன், ஹீரா பென் வசித்து வந்தார்.
இந்நிலையில் தான் ஹீரா பென் சமீபத்தில் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து பிரதமர் மோடி தாயை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, ஆசியும் பெற்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை
அதன்பிறகு சில வாரங்களுக்கு முன்பு குஜராத்துக்கு தேர்தல் நடந்தபோது பிரதமர் மோடி ஓட்டளிக்க சென்றார். இந்த வேளையில் மோடி, தனது தாய் ஹீரா பென்னை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இந்நிலையில் ஹீராபென் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அகமதாபாதில் உள்ள யுஎன் மேத்தா இதய நோய் சிகிச்சை மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் பிரிந்த உயிர்
இந்நிலையில் ஹீரா பென்னுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். ஹீரா பென்னின் உயிர் இன்று காலை 3.30 மணியளவில் மருத்துவமனையில் பிரிந்தது. அதன்பிறகு அவரது உடல் அவர் வசித்த வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி அறிந்தவுடன் பிரதமர் மோடி குஜராத் விரைந்து சென்றார். தாய் ஹீரா பென்னின் உடலை பார்த்து அவர் கண்கலங்கினார். மேலும் மலர் வளையம் வைத்து உடலின் முன்பு கும்பிட்டு விழுந்து கண் கலங்கினார். அதன்பிறகு ஹீரா பென்னின் இறுதி சடங்குகள் துவங்கியது.

தாயின் உடலை சுமந்த பிரதமர் மோடி
அப்போது பிரதமர் நரேந்திர மோடி ஹீரா பென்னின் உடலை தோளில் சுமந்து சென்றார். அப்போது அவரது முகம் மிகவும் வாடியிருந்தது. கண்கள் கலங்கி மிகவும் சோகமாக பிரதமர் மோடி காணப்பட்டார். தாய் ஹீரா பென்னின் உடலை பிரதமர் மோடி தோளில் சுமந்து செல்லும் போட்டோ, வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் பலரும் கண்கலங்கி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தாய் பற்றி பிரதமர் கூறியது என்ன?
முன்னதாக பிரதமர் மோடி தனது தாய் ஹீரா பென்னின் மறைவு பற்றி சில விஷயங்களை ட்விட்டரில் குறிப்பிட்டு இருந்தார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛‛‛ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது. துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளம், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை தாயாரிடம் உணர்ந்தேன் . புத்திசாலித்தனத்துடன் வேலை செய்ய வேண்டும். தூய்மை வாழ்க்கையை வாழ வேண்டும் என 100வது பிறந்தநாளில் தாயார் சொன்ன விஷயம் எப்போதும் நினைவில் இருக்கும்" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications